2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளது. அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆகஸ்ட் 20க்கு பின் அங்கே கிளம்பிச் செல்ல உள்ளன. அதற்கு முன் அனைத்து அணிகளும் தங்கள் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யத் துவங்கி உள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் திட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்த வாரம் மும்பையில் ஒன்று கூடி அங்கிருந்து தனி விமானத்தில் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இருந்தது. அந்த அணி வீரர்கள் ஆறு நாட்கள் மும்பையில் தனிமைப்படுத்திக் கொண்டு மூன்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய இருந்தனர்.
இரண்டு பரிசோதனை
மும்பையில் கூடுவதற்கு முன்னரும் இரண்டு பரிசோதனை செய்து கொள்ளும்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தங்கள் வீரர்கள், பயிற்சியாளர்கள் குழுவிற்கு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி அனைவரும் பரிசோதனை செய்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யக்னிக்கிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதை அவரே உறுதிப்படுத்தி இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
14 நாட்கள் மருத்துவமனையில் அனுமதி
திஷாந்த் யக்னிக் ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக ஆடியவர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் ஆடி உள்ளார். தற்போது தன் சொந்த ஊரான உதய்பூரில் வசித்து வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கேயே மருத்துவமனையில் 14 நாட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திஷாந்த் யக்னிக் ட்வீட்
இது குறித்து திஷாந்த் யக்னிக் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், தன்னுடன் கடந்த 10 நாட்களில் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும், 14 நாட்கள் தனிமைக்கு பின் இரண்டு முறை பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவு கிடைத்தால் தான் அணியுடன் இணையலாம் எனவும் கூறி உள்ளார்.
எப்படி அணியில் இணைய முடியும்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 14 நாட்களுக்கு பின் பிசிசிஐ விதிமுறைப்படி திஷாந்த் யக்னிக் இரண்டு பரிசோதனை செய்து கொள்வார். இரண்டு முறை நெகடிவ் முடிவு வந்த உடன் மீண்டும் 6 நாட்கள் தனிமையில் இருந்து மூன்று நெகடிவ் முடிவு வந்தால் அவர் அணியுடன் இணைவார் என கூறி உள்ளது.
ராஜஸ்தான் வீரர்கள்
மேலும், அவருடன் எந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரும் கடந்த பத்து நாட்களில் நேரடி தொடர்பு கொள்ளவில்லை என அந்த அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. அவர் விரைவாக குணமடைய வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டுள்ளது.
அணிகள் தயார் ஆகவேண்டும்
அனைத்து ஐபிஎல் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் மேலும் சிலருக்கு பாதிப்பு இருப்பதாக செய்திகள் வரக் கூடும். ஐபிஎல் அணிகள் அதற்கு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.