சிஎஸ்கே சிக்கல்கள்
சிஎஸ்கே அணியில் ஐபிஎல் தொடர் துவங்கும் முன்பே சிக்கல்கள் எழுந்தன. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் என இரு அனுபவ வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினர். இதில் ரெய்னா, சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தான் விலகினார் என கூறப்படுகிறது.
தோல்விகள்
இரு வீரர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானதால் சிஎஸ்கே அணி தாமதாமாக பயிற்சி செய்யத் துவங்கியது. சரியான அணியை தேர்வு செய்ய முடியாமல் தடுமாறியது. அந்த அணி முதல் நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகளை சந்தித்தது.
அணி மாற்றம்
நான்காவது போட்டிக்கு முன்பே அணியை மாற்றியும் அந்தப் போட்டியில் வெல்லாவிட்டாலும், அடுத்த போட்டியில் சிஎஸ்கே வென்றது. ஆனால், அப்போதும் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்சனை தீரவில்லை. தோனி, கேதர் ஜாதவ் இருவரும் பந்துகளை வீணடித்து தோல்விகளுக்கு காரணமாக விளங்குகின்றனர்.
கொல்கத்தா போட்டி
குறிப்பாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி முதல் பத்து ஓவர்களில் அபாரமாக ரன் குவித்தது. ஆனால், அதன் பின் விக்கெட்களை இழந்து வந்தது. அப்போது தோனிக்கு பின் ஜடேஜா அல்லது பிராவோ களமிறங்கி இருக்கலாம். ஆனால், சுத்தமாக பார்ம் அவுட்டில் இருக்கும் ஜாதவ் களமிறக்கப்பட்டார்.
ஜாதவ் மீது நம்பிக்கை ஏன்?
கேதர் ஜாதவ் அந்தப் போட்டியில் சிங்கிள் ரன்களும் எடுக்காமல், பவுண்டரி அடிக்கவும் முயற்சி செய்யாமல் டாட் பால் ஆடி சேஸிங்கை நாசம் செய்தார். சிஎஸ்கே அணி மீண்டும் ஒரு தோல்வி அடைந்து கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
அணிக்காக ஆடும் ஜடேஜா
ஜடேஜாவை ஏன் பேட்டிங் வரிசையில் ஐந்தாம், ஆறாம் இடத்தில் பேட்டிங் செய்ய வைக்க தோனி மறுக்கிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜடேஜா தன் விக்கெட்டை கூட கருதாமல் அணிக்காக ஆடி வருகிறார். இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக ரன் ரேட்டை உயர்த்த 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அது கடைசி நேரத்தில் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
நிரூபித்த ஜடேஜா
அதன் பின்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி ரன் அடிக்க திணறிய போது அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் அதிரடி ஆட்டம் ஆடி 35 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். கொல்கத்தா போட்டியில் கூட ஜாதவ் மோசமாக ஆடி வந்த போது மறுபுறம் வெறி கொண்டவராக ஜடேஜா 8 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார்.
பந்துவீச வாய்ப்பு தராத தோனி
இந்த இரண்டு போட்டிகளிலும் ஜடேஜா சற்று முன் பேட்டிங் ஆட இறங்கி இருந்தால் அணியை தனி ஆளாக வெற்றி பெற வைத்திருப்பார். அவரிடம் அந்த ஆற்றல் உள்ளது என்பதை வெளிப்படுத்தி உள்ளார். பேட்டிங்கில் கலக்கினாலும் முதல் மூன்று போட்டிகளில் பந்துவீச்சில் சொதப்பிய ஜடேஜா, அதன் பின் நன்றாகவே பந்து வீசி வருகிறார்.
அதிருப்தி
ஆனால், கொல்கத்தா போட்டியில் மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் ஜடேஜாவுக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பளிக்கவில்லை தோனி. பேட்டிங்கில் ஓரங்கட்டப்படுவது, பந்துவீச்சில் ஒரு ஓவர் கூட கொடுக்காதது என ஜடேஜா சிஎஸ்கே அணி நிர்வாகம் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து, ஜடேஜாவும் விரிசலை ஏற்படுத்துவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரசிகர்கள் கோபம்
மறுபுறம் சிஎஸ்கே அணி ஆறு போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து உள்ள நிலையில், மீண்டும், மீண்டும் அதே தவறுகளை செய்வதால் சிஎஸ்கே ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். சிஎஸ்கே வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தாக்கி சிலர் கருத்து கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.