சிஎஸ்கே நிலை
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் 8 தோல்விகள் அடைந்துள்ளது. லீக் சுற்றுக்கான புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே-ஆஃப் வாய்ப்பு கனவாக மாறி உள்ளது. இதுவரை 10 சீசன்களில் அந்த அணி பிளே-ஆஃப் செல்லாமல் இருந்ததே இல்லை.
பெங்களூர் அணியுடன் மோதல்
இந்த நிலையில், அடுத்து வரும் போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெற சிஎஸ்கே போராடும் என எதிர்பார்க்கப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக களமிறங்கியது சிஎஸ்கே அணி. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இரு வீரர்களுக்கு வாய்ப்பு
சிஎஸ்கே அணியில் இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல் இருந்த மிட்செல் சான்ட்னர், மோனு குமார் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு அளித்தார் கேப்டன் தோனி.
ஏன் இந்த முடிவு?
ஏற்கனவே, பிளே-ஆஃப் பறிபோன நிலையில், சிஎஸ்கே அணி தொடர்ந்து பார்ம் அவுட் ஆன வீரர்களுக்கே வாய்ப்பு அளிக்கிறது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில், தோனி இளம் வீரர்கள், வாய்ப்பு அளிக்கபடாத வீரர்களுக்கு கடந்த போட்டி முதல் வாய்ப்பு அளித்து வருகிறார்.
நீக்கப்பட்ட வீரர்கள்
வேகப் பந்துவீச்சாளர்கள் ஜோஷ் ஹேசல்வுட், ஷர்துல் தாக்குர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதில் சுழற் பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர், வேகப் பந்துவீச்சாளர் மோனு குமார் அணியில் இடம் பெற்றனர். துபாய் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைத்து வரும் நிலையில் கூடுதல் சுழற் பந்துவீச்சாளரை தேர்வு செய்தார் தோனி.
தோனி என்ன சொன்னார்?
இந்த மாற்றம் குறித்து தோனி பேசுகையில், எங்களுக்கு பிளே-ஆஃப் செல்ல குறுகிய வாய்ப்பு உள்ளது. ஆனாலும், நாங்கள் இந்த சீசனில் எப்படி ஆடினோம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். 4 - 5 போட்டிகளுக்கு முன்பு நாங்கள் ஒவ்வொரு போட்டியாக அணுகினோம், புள்ளிப் பட்டியல் குறித்து கவலைப்படவில்லை என்றார்,
வாய்ப்பு
தற்போது வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு நாங்கள் வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். சிஎஸ்கே அணி கடும் விமர்சனம் காரணமாக வெற்றி, தோல்விகளை மறந்து அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது.