டாஸ் வெற்றி
துபாயில் நடந்த இந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்றது. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணி எப்படியும் பலவீனமாக இருந்ததால் சேஸிங்கில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று நெட் ரன் ரேட்டை அதிகரிக்கலாம் என்ற நோக்கில் அவர் பேட்டிங் தேர்வு செய்தார்.
சுமார் துவக்கம்
பெங்களூர் அணிக்கு தேவ்தத் படிக்கல் - ஆரோன் பின்ச் துவக்கம் அளித்தனர். முதல் 3 ஓவர்களில் இருவரும் ரன் குவித்தாலும் அதன் பின் அந்த ஜோடி தடுமாறியது. பின்ச் 15, படிக்கல் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து கோலி - டிவில்லியர்ஸ் ஜோடி ஆடியது.
கோலி அரைசதம்
விராட் கோலி - டி வில்லியர்ஸ் சேர்ந்தால் அதிரடி ஆட்டம் தான் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மந்தமான ஆடுகளத்தில் இருவரும் நிதான ஆட்டம் ஆடினர். கோலி அரைசதம் எட்டி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பெங்களூர் ஸ்கோர்
அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, கடைசி ஓவர்களில் ரன் குவிப்பு தடைபட்டது. பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. இது மந்தமான துபாய் ஆடுகளத்தில் சிஎஸ்கே அணிக்கு சவாலான இலக்காக இருந்தது.
கடைசி ஓவர்களில் சிஎஸ்கே
பந்துவீச்சில் சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக கடைசி ஓவர்களில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் ஏபி டிவில்லியர்ஸ், விராட் கோலி, மொயீன் அலி, கிறிஸ் மோரிஸ் விக்கெட்டை வீழ்த்தினர். அதன் காரணமாக பெங்களூர் அணியால் 150 ரன்களை தாண்ட முடியவில்லை.
சாம் கர்ரன் அபாரம்
சுட்டிக் குழந்தை சாம் கர்ரன் அபாரமாக பந்து வீசினார். அவர் 3 ஓவர்கள் மட்டுமே வீசினார். அதில் 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். சாஹர் 2, சான்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.