கொல்கத்தா அணி வெற்றி நடை
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பல அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது. இந்த ஆண்டு இயான் மார்கன், பாட் கம்மின்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல் என அதிக நட்சத்திர வீரர்களையும் கொண்டுள்ளது. ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது.
புகார்
கடந்த போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது கொல்கத்தா. அந்தப் போட்டியின் முடிவில் அம்பயர்கள் சுனில் நரைன் பந்துவீச்சு குறித்து புகார் அளித்தனர். அவர் அனுமதிக்கப்பட்ட முறைக்கு மாறாக பந்து வீசுவதாக சந்தேகப்படுவதாக அவர்கள் புகார் அளித்தனர்.
தடை செய்ய வாய்ப்பு
மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டால் அவர் இந்த ஆண்டு முழுவதும் தடை செய்யப்படுவார். குறிப்பிட்ட இடைவெளிக்குள் இரண்டு முறை ஒரு பந்துவீச்சாளர் பந்துவீசும் முறை குறித்து புகார் எழுந்தால் அவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்படும். மேலும், அவர் தன் பந்துவீச்சை சரியானது என நிரூபிக்க வேண்டும்.
பெங்களூர் போட்டி
சுனில் நரைன் கொல்கத்தா அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த நிலையில், அவரை அடுத்ததாக கொல்கத்தா ஆடிய பெங்களூர் போட்டியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட வைப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. அவர் இல்லாமல் பந்துவீச்சின் பலம் நிச்சயம் குறையும்.
நரைன் அதிரடி நீக்கம்
ஆனாலும், அவரை பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் நீக்கி இருந்தார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக். இது சற்று அதிர்ச்சியான முடிவாகவும் அமைந்தது. அவர் பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடி கை கொடுப்பார். அந்த வகையில் அவர் ஆடாதது அந்த அணிக்கு பெரும் இழப்பாகும்.
இது தான் காரணம்
சுனில் நரைன் மீண்டும் அடுத்த ஐபிஎல் லீக் போட்டிகளில் ஆடி, அதில் மீண்டும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டால் அவர் தடையில் சிக்குவார். அது கொல்கத்தா அணியையும் பாதிக்கும். கொல்கத்தா அணி அவரது பந்துவீச்சு சரியானது என நிரூபிக்க வாய்ப்பு கிடைக்குமா? என முயற்சி செய்து வருகிறது.
டாம் பான்டன்
அது வரை சுனில் நரைன் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்றே கருதப்படுகிறது. அவருக்கு பதில் மற்றொரு சுழற் பந்துவீச்சாளரை தினேஷ் கார்த்திக் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். அதிரடி பேட்ஸ்மேன் டாம் பான்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.