பெங்களூர் - பஞ்சாப் போட்டி
2020 ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது.
ஷார்ஜா மைதானம்
இந்தப் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானத்தில் சிறிய பவுண்டரி எல்லை என்பதால் எளிதாக சிக்ஸ் அடிக்கலாம். அதே சமயம், அந்த ஆடுகளம் மந்தமாக மாறி விட்டதால் சேஸிங் செய்யும் அணிக்கு அது கடினமாக இருக்கும்.
பெங்களூர் பேட்டிங் எப்படி?
இந்த நிலையில், பெங்களூர் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆரோன் பின்ச் 20, படிக்கல் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி மூன்றாவதாக இறங்கினார். அடுத்து வந்த சுந்தர் 13 ரன்களில் வெளியேறினார்.
டிவில்லியர்ஸ் எங்கே?
ஐந்தாவது பேட்ஸ்மேன் ஆக ஏபி டிவில்லியர்ஸ் களமிறங்கி இருக்க வேண்டும். ஆனால், அவர் இறங்கவில்லை. இதை அடுத்து ரசிகர்கள் ஏபி வில்லியர்ஸ் எங்கே என கேள்வி எழுப்பத் துவங்கினர். சிலர் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா? என்ற கவலையும் கொண்டனர். ஆனால், அவருக்கு அப்படி எதுவும் நேரவில்லை.
சிவம் துபேவுக்கு வாய்ப்பு
டிவில்லியர்ஸ்க்கு பதில் சிவம் துபே ஐந்தாவது வீரராக களமிறங்கினார். அவர் அதிரடியாக ஆடுவார் என கோலி இந்த முடிவை எடுத்தார். ஆனால், அவர் 19 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின்னரே ஏபி டிவில்லியர்ஸ் களமிறங்கினார்.
சொதப்பல் திட்டம்
டிவில்லியர்ஸ் கடைசி 5 ஓவர்களில் பட்டையைக் கிளப்புவார் என காத்திருந்த நிலையில், அவர் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கோலியும் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கோலி போட்ட திட்டம் தோல்வி அடைந்தது.
மோரிஸ்
கடைசி நேரத்தில் கிறிஸ் மோரிஸ் பெங்களூர் அணியை காப்பாற்றினார். 8 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பஞ்சாப் அணியை திணற வைத்தார். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.