விராட் கோலி பார்ம்
விராட் கோலி கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன் நடந்த போட்டிகளில் கூட தன் உச்சகட்ட பார்மில் இல்லை. கடைசியாக இந்தியா ஆடிய சர்வதேச தொடரான நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே எடுத்து இருந்தார்.
ஒருநாள் தொடரில் அவர் 9, 15, 51 என்ற அளவில் தான் ரன் எடுத்து இருந்தார். அதற்கு முன் நடந்த டி20 தொடரிலும் சொற்ப ரன்களே எடுத்து இருந்தார். டெஸ்ட் தொடரில் 2, 19, 3, 14 என நான்கு இன்னிங்க்ஸ்களில் மொத்தமே 38 ரன்களே எடுத்து இருந்தார்.
ஒரு பவுண்டரி கூட இல்லை
அடுத்து 2020 ஐபிஎல் தொடரில் நீண்ட இடைவெளிக்கு பின் பங்கேற்ற விராட் கோலி இதிலும் சொதப்பி வருகிறார். ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் 13 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. அடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக 1 ரன் மட்டுமே எடுத்தார்.
கவாஸ்கர் விளாசல்
அப்போது முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். கொரோனா வைரஸ் லாக்டவுன் சமயத்தில் கோலி, அவரது மனைவி அனுஷ்கா வீசிய பந்துகளில் மட்டுமே பயிற்சி செய்தார் என சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார்.
மும்பை இந்தியன்ஸ் போட்டி
இந்த நிலையில், தன் மீதான விமர்சனத்துக்கு கோலி மும்பை இந்தியன்ஸ் போட்டியில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் போட்டியில் விராட் கோலி தட்டுத் தடுமாறி ஆடினார். பேட்டிங் செய்யவே முடியாமல் திணறினார்.
அதிர்ச்சி
க்ருனால் பாண்டியா, பும்ரா, ராகுல் சாஹர் உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை சந்திக்கவே அவர் திணறினார். ராகுல் சாஹர் பந்துவீச்சில் அவர் 11 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
ரசிகர்கள் கவலை
விராட் கோலியின் பார்ம் குறித்து இந்திய ரசிகர்கள் பெரும் கவலை கொள்ளத் துவங்கி உள்ளனர். பல இளம் இந்திய வீரர்கள் இந்த ஐபிஎல் சீசனில் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். ஓய்வு பெற்று விட்ட தோனி பேட்டிங் சரியில்லை என்ற விமர்சனம் உள்ளது.
என்ன செய்யப் போகிறார் கோலி?
ஆனால், அதை விட முக்கியமாக உலகின் முன்னணி வீரராக இருக்கும் விராட் கோலி பார்ம் இழந்தது தான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கோலி அடுதாஹ் சில போட்டிகளில் பார்மை மீட்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்,
பெங்களூர் ஸ்கோர்
கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்த போதும், படிக்கல் 54, பின்ச் 52, டி வில்லியர்ஸ் 55 ரன்கள் ,குவிக்கவே பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. மும்பை அணிக்கு சவால் விடுத்தது.