திவாதியா ஜோடி
நேற்று திவாதியாவுடன் இணைந்து ரியான் பராக் மாஸ் காட்டு காட்டினார். நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணி 20ஓவரில் 4 விக்கெட் இழந்து 158 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணிக்கு இது எளிதான ஸ்கோர் என்றாலும்.. தொடக்கத்தில் இருந்து ராஜஸ்தான் பேட்டிங் மோசமாக சொதப்பியது. அடுத்தடுத்து வரிசையாக ராஜஸ்தான் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.
விக்கெட் எடுத்தனர்
அதிலும் ஜோஸ் பட்லர் 16 ரன்னுக்கும், ஸ்மித் 5 ரன்னுக்கும், பெண் ஸ்டோக்ஸ் 5 ரன்னுக்கும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். சஞ்சு சாம்சனும் 26 ரன் எடுத்து அவுட்டானார் அதேபோல் ராபின் உத்தப்பாவும் 18 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். இந்த நிலையில் ராஜஸ்தானை தோல்வி அடைந்துவிடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் ராகுல் திவாதியா, ரியான் பராக் இருவரும் தங்கள் மனதில் வேறு திட்டங்களை வைத்து இருந்தனர்.
எப்படி நடந்தது
கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் 65 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஹைதராபாத் அணியின் பவுலிங் வலிமையாக இருப்பதால் கண்டிப்பாக ராஜஸ்தான் தோல்வி அடையும் என்றுதான் எல்லோரும் கணித்து இருந்தனர். ஆனால் கடைசி கட்டத்தில் ராகுல் திவாதியா 28 பந்தில் 45 ரன்களும், ரியான் பாரக் 26 பந்தில் 42 ரன்களும் எடுத்தனர்.
எத்தனை ரன்கள்
அதிலும் இவர்கள் இருவரும் வரிசையாக கலீல் அகமது ஓவரிலும் ரஷீத் கான் ஓவரிலும் பந்துகளை பறக்கவிட்டனர். வெற்றியே பெற வாய்ப்பு இல்லாத போட்டியில் ராஜஸ்தான் கடைசியில் வென்றது. அதிலும் கடைசியில் இரண்டு பந்தில் 2 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் ரியான் 6 அடித்து கலக்கினார். ஹைதராபாத் 158 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் 163 ரன்களை எடுத்து வென்றது.
அசாம் வீரர்
ரியான் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். வெறும் 18 வயதே ஆன இவர் நேற்று போட்டியில் ஹீரோவாக மாறி உள்ளார். நேற்று போட்டிக்கு பின் இவர் வித்தியாசமாக நடனம் ஆடி ராஜஸ்தான் வெற்றியை கொண்டாடினார். இவரின் செலிப்ரேஷன் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. எல்லோரும் வெற்றிபெற்றால் ஆக்ரோஷமாக கத்துவார்கள்.. ஆனால் ரியான் அமைதியாக, அழகாக நடனம் ஆடினார்.
இணையம் முழுக்க வைரல்
இந்த நிலையில் இவரின் நடனம் குறித்து பலரும் நேற்று இணையத்தில் சர்ச் செய்தனர். இவர் நேற்று ஆடிய நடனத்திற்கு பெயர் அசாம் மாநிலத்தின் அடையாளமான பிஹு நடனம் ஆகும். அசாம் மாநில மக்களின் வாழ்க்கையோடு இந்த நடனம் இணைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட்டில் வடகிழக்கு மாநில மக்கள் இல்லாத நிலையில் அசாமில் இருந்து ரியான் வந்து ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார்.
புறக்கணிப்பு
அசாமில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை பிசிசிஐ பெரிய அளவில் கண்டுகொள்வது இல்லை. அங்கு இருக்கும் வீரர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ள நிலையில்.. அந்த இளைஞர்கள் எல்லோருக்கும் வழிகாட்டியாக, அடையாளமாக ரியான் நேற்று அந்த நடனத்தை ஆடினார். எங்கள் மாநிலத்திலும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் ரியான் பிஹு நடனம் ஆடி கொண்டாடினார்.