ஐபிஎல் செயல்பாடு
2020 ஐபிஎல் தொடரில் வழக்கம் போல விராட் கோலி கேப்டனாக இருக்கும் பெங்களூர் அணி சொதப்பியது. தொடரின் துவக்கத்தில் நன்றாக ஆடிய அந்த அணி கடைசி ஐந்து போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து பிளே-ஆஃப் சுற்றுடன் வெளியேறியது.
ரோஹித் முன்னிலை
மறுபுறம் ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கம் முதல் இறுதிப் போட்டி வரை நிலையாக ஆடி வெற்றிகளை குவித்து ஐபிஎல் கோப்பை வென்றது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் கோப்பை வென்ற மும்பை அணிக்கு, இது ரோஹித் சர்மா தலைமையில் ஐந்தாவது கோப்பை ஆகும்.
கோலி பதவி விலக வேண்டும்
இந்த நிலையில், விராட் கோலி பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். இந்திய அணிக்கும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றார் அவர்.
ஆகாஷ் சோப்ரா ஆதரவு
மறுபுறம் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பெங்களூர் அணி தான் சரியில்லை. அதற்கு விராட் கோலி என்ன செய்வார்? அதே பெங்களூர் அணியை வைத்துக் கொண்டு ரோஹித் சர்மாவால் கோப்பை வெல்ல முடியுமா? அப்படி அவரால் பெங்களூர் அணியை வைத்துக் கொண்டு எத்தனை கோப்பை வெல்ல முடியும்? என கேள்வி எழுப்பி சீண்டி இருந்தார்.
ரோஹித் பதிலடி
இந்த நிலையில் இந்த கருத்துக்கு ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். ரோஹித் சர்மா மற்ற அணியை ஐபிஎல் கோப்பை வெல்ல வைத்து இருப்பாரா? என பலர் கேட்கிறார்கள். முதலில் நான் ஏன் வேறு அணியை கோப்பை வெல்ல வைக்க வேண்டும்? என எதிர் கேள்வி எழுப்பி உள்ளார் அவர்.
மும்பை இந்தியன்ஸ்
மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வழியில் செல்ல நினைக்கிறது. ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அதே வழியில் தான் நானும் செல்ல நினைக்கிறேன் என தன் மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி குறிப்பிட்டார் ரோஹித் சர்மா.
ஒருநாளில் வரவில்லை
இந்த அணி ஒரு இரவில் வந்து விட்டதா? இல்லை. இந்த அணிக்கு வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பதில் நம்பிக்கை இல்லை. மேலும், ஒவ்வொரு வீரரும் ஏலத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டார். ரோஹித் சர்மா உட்பட என்றார்.
கோலி செய்யும் தவறு
ரோஹித் சர்மா ஆகாஷ் சோப்ராவுக்கு மட்டும் இதில் பதிலடி கொடுக்கவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி என்ன தவறு செய்கிறது என்பதை பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். விராட் கோலியின் மனநிலையை அப்படியே குத்திக் காட்டி இருக்கிறார்.
மாற்றிக் கொண்டே இருக்கும் கோலி
விராட் கோலி எப்போதும் வீரர்களை மாற்றிக் கொண்டே இருப்பதை ரோஹித் சர்மா மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை குவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள் அதை செய்வதில்லை.