2019 உலகக்கோப்பை
2019 உலகக்கோப்பை தொடரின் முடிவில் தான் இந்திய அணியில் ரோஹித் சர்மா - விராட் கோலி இடையே விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. அப்போது இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த உடன் இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
விரிசல் உண்மையா?
ஆனால், அடுத்த சில நாட்கள் இரு தரப்பிலும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. பின்னர் ரவி சாஸ்திரி - கோலி அப்படி எந்த விரிசலும் இல்லை என விளக்கம் அளித்தனர். அதன் பின் கோலி - ரோஹித் சர்மா இணைந்து ஆடியதால் அந்த வதந்தி மறைந்து போனது.
மீண்டும் வெடித்த சர்ச்சை
2020 ஐபிஎல் தொடரில் அந்த விரிசல் சர்ச்சை மீண்டும் தலை தூக்கியது. ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட காயத்தை காரணமாகக் காட்டி அவரை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தே நீக்கியது பிசிசிஐ. அதன் பின்னணியில் கோலி இருப்பதாக சர்ச்சை வெடித்தது.
உள்ளே வந்த மும்பை இந்தியன்ஸ்
அப்போது ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளே வந்து அவர் காயம் விரைவில் குணமாகிவிடும் என்பதைக் காட்ட அவர் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டது. மும்பை அணி ரோஹித் சர்மாவுக்கு உதவ முயற்சி செய்தது வெளிப்படையாக தெரிந்தது.
பேசக் கூட மாட்டாரா?
அதன் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்பட்டும், ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லவில்லை. அது குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது என்று பேட்டியில் கூறினார் கோலி. தன் அணி வீரர் எங்கே இருக்கிறார், எப்போது அணியில் இணைவார் என்பதை பிசிசிஐ தான் கூற வேண்டுமா? ஒரு கேப்டனாக தொலைபேசியில் பேச மாட்டாரா? அந்த அளவுக்கு ரோஹித் சர்மாவுடன் விரிசலா? என்ற கேள்வி எழுந்தது.
அணி மாறிய வீரர்
இப்படி ஒரு நிலையில் தான் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்று இருந்த பார்த்திவ் பட்டேல் திடீரென கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் பதவி பெற்று இருக்கிறார். கோலி கூடாரத்தில் இருந்து, ரோஹித் சர்மா கூடாரத்துக்கு மாறினார்.
விமர்சனம்
பார்த்திவ் பட்டேல் கடந்த சில நாட்களாக ரோஹித் சர்மா இந்திய டி20 அணியின் கேப்டனாக வர வேண்டும் என பேசி வருகிறார். தன் ஐபிஎல் அணி கேப்டனான விராட் கோலியின் கேப்டன்சியை அவர் விமர்சனம் செய்து வந்தார். அப்போதே சந்தேகம் எழுந்தது.
பின்னணியில் ஐபிஎல் அணி?
பார்த்திவ் பட்டேல் ஏன் இப்படி பேசி வருகிறார்? கோலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா? என்ற கேள்விகள் எழுந்தன. தற்போது பார்த்திவ் பட்டேல் பின்னணியில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கலாம் என கருதப்படுகிறது. அவருக்கு அந்த அணி ஓய்வு பெற்ற உடன் இளம் திறமையாளர்களை அடையாளம் காணும் டேலன்ட் ஸ்கவுட் பதவியை அளித்துள்ளது.
கோலிக்கு அழுத்தம்
ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவி அளிக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் விராட் கோலிக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிராக திட்டமிட்டு அழுத்தம் அளிக்கப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.