கொல்கத்தா அணியின் நிலை
கொல்கத்தா அணி கடந்த இரண்டு சீசன்களில் சுமாராகவே செயல்பட்டது. தினேஷ் கார்த்திக் தலைமையில் 2018இல் பிளே-ஆஃப் சென்றாலும், 2019இல் அணியில் கலகம் ஏற்பட்டு, பிளே-ஆஃப் வாய்ப்பையும் இழந்தது அந்த அணி. இருந்தாலும் 2020 ஐபிஎல் தொடரிலும் அவரே கேப்டனாக தொடர்கிறார்.
சிக்கலில் தினேஷ் கார்த்திக்
தற்போது கொல்கத்தா அணியில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் இருக்கும் நிலையில் அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதனால் இந்த சீசனில் சிக்கலில் இருக்கிறார் தினேஷ் கார்த்திக். தொடர்ந்து வெற்றிகளை பெற்றுக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
ராஜஸ்தான் போட்டி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி பேட்டிங் செய்யத் துவங்கியதும் அவரது கேப்டன்சி குறித்து விமர்சனம் செய்யத் துவங்கினர் ரசிகர்கள். துவக்க வீரர்கள் குறித்து முதலில் விமர்சனம் முன் வைக்கப்பட்டது.
சுனில் நரைன்
தற்போது கொல்கத்தா அணியில் சுனில் நரைன் துவக்க வீரராக ஆடி வருகிறார். பந்துவீச்சாளரான அவர் அதிரடியாக ரன் குவிக்க வேண்டி துவக்க வீரராக இரண்டு ஆண்டுகளாக ஆடவைக்கப்பட்டு வருகிறார். சமீபத்திய போட்டிகளில் அவரால் பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை.
மாற்றவில்லை
எனவே அவரை துவக்க வீரராக ஆட வைக்காமல் வேறு முழு நேர பேட்ஸ்மேன் ஒருவரை துவக்கம் அளிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அந்த மாற்றத்தை தினேஷ் கார்த்திக் இதுவரை செய்யவில்லை.
இயான் மார்கனுக்கு முன் பேட்டிங்
நரைன் இந்தப் போட்டியில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து 3 விக்கெட் வீழ்ந்த பின் இயான் மார்கனுக்கு முன் பேட்டிங் செய்ய களமிறங்கினார் தினேஷ் கார்த்திக். கடந்த போட்டியிலும் அவர் இதே போல பேட்டிங் இறங்கி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார்.
அவுட்
இந்தப் போட்டியிலும் 3 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதை அடுத்து அவர் ஏன் பேட்டிங் வரிசையில் முன்னே இறங்க ஆசைப்படுகிறார்? என்ற கேள்வி எழுந்தது. மேலும், அவர் பேட்டிங் பார்ம் மோசமாக இருப்பதும் விமர்சனம் செய்யப்பட்டது.
கேப்டன்சி பயமா?
சில ரசிகர்கள் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனுக்கு கேப்டன் பதவி போய்விடும் என்ற பயத்தில் தினேஷ் கார்த்திக் அவருக்கு முன் பேட்டிங் செய்ய ஆசைப்படுகிறாரா? என்று கேள்வி எழுப்பினர். இயான் மார்கன் இந்தப் போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று 23 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார்.
யார் சிறந்த கேப்டன்?
சில ரசிகர்கள் இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வென்று கொடுத்த இயான் மார்கன் - கொல்கத்தா அணியை மோசமாக வழிநடத்தும் தினேஷ் கார்த்திக் இருவரில் யார் சிறந்த கேப்டன் என கேள்வி எழுப்பி உள்ளனர். தினேஷ் கார்த்திக் பதவி அதிக நாள் நீடிக்காது என்றே கருதப்படுகிறது.