ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறது. தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் 200 ரன்களை கடந்துள்ளது. அந்த அணியில் சஞ்சு சாம்சன், ராகுல் திவாதியா, ஜோப்ரா ஆர்ச்சர் என பல வீரர்கள் சகட்டு மேனிக்கு சிக்ஸ் அடித்து வருகின்றனர்.
ராகுல் திவாதியா
கடந்த போட்டியில் ராகுல் திவாதியா சிக்ஸ் அடிக்க நான்காம் வரிசையில் களமிறக்கப்பட்டார். ஆனால், அவரால் முதல் சில பந்துகளில் சரியாக ஆட முடியவில்லை. பந்து பேட்டிலேயே படவில்லை. மோசமான ஆட்டத்தால் கடும் விமர்சனத்தை சந்தித்து வந்தார்.
பெரும் ரசிகர் கூட்டம்
ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸ் அடித்து போட்டியை தலைகீழாக மாற்றினார். அந்தப் போட்டியின் முடிவில் அவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் சேர்ந்தது. மனம் தளராமல் போராடிய அவரது குணம் ரசிகர்களை கவர்ந்தது.
ஜோப்ரா ஆர்ச்சர்
அதே போல, முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசி ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்ஸ் அடித்த ஜோப்ரா ஆர்ச்சருக்கும் பெரும் ரசிகர் கூட்டம் சேர்ந்துள்ளது. அவரை பேட்டிங் ஆர்டரில் மேலே ஆட வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இவர்கள் ஓபனிங் இறங்கினால்..
இந்த நிலையில், இந்த இரண்டு சிக்ஸ் அடிக்கும் பேட்ஸ்மேன்களும் ஓபனிங் இறங்கினால் எப்படி இருக்கும்? இதைத் தான் ட்வீட்டாக போட்டது ராஜஸ்தான். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி துவங்க ஒரு மணி நேரம் இருக்கும் போது அந்த ட்வீட்டை பதிவிட்டது ராஜஸ்தான்.
பெரும் வரவேற்பு
திவாதியா மற்றும் ஆர்ச்சரை துவக்க வீரராக இறக்க வேண்டும் என்றால் இந்த ட்வீட்டை 3000 பேர் ரீட்வீட் செய்யுங்கள் என கூறி இருந்தது ராஜஸ்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த பதிவுக்கு 7500க்கும் மேற்பட்ட ரீட்வீட்கள் கிடைத்தது.
சிஎஸ்கேவை மிஞ்சியது
ஐபிஎல் அணிகளில் சிஎஸ்கே அணி தான் சமூக வலைதளங்களில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி போடும் ட்வீட்களுக்கு எப்போதும் பெரும் வரவேற்பு இருக்கும். ஆனால், இந்த முறை சிஎஸ்கே தோல்விகளால் துவண்டு இருக்கும் நிலையில், வெற்றியை குவித்து வரும் ராஜஸ்தான் பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்து வருகிறது.
போட்டியில் நடக்குமா?
அதிக ரீட்வீட்கள் கிடைத்தாலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் ஓபனிங் வீரர்களை மாற்றாது. ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர் தான் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். இது வேடிக்கையான பதிவு என்றாலும் 7500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இதை வரவேற்றுள்ளனர்.