துவக்க வீரர்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் 2018 ஐபிஎல் தொடர் முதல் கிறிஸ் கெயில் ஆடி வருகிறார். 2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் துவக்க வீரராக ஆடி சில போட்டிகளில் அதிரடியாக ரன் குவித்த கிறிஸ் கெயில், 2020 ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார்.
கடைசி ஐபிஎல் தொடர்
அனேகமாக இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. இந்த நிலையில், அவர் பஞ்சாப் அணிக்காக ஆடுவார் என ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இந்த தொடரில் பஞ்சாப் அணியின் முதல் போட்டியில் கிறிஸ் கெயில் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதன் பின்னும் தேர்வு செய்யப்படவில்லை.
மாற்றம் செய்ய வேண்டாம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று தோற்றது. இரண்டாவது போட்டியில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இதை அடுத்து நன்றாக ஆடும் அணியில் மாற்றம் செய்ய வேண்டாம் என்ற முடிவில் ஜாம்பவான் வீரர் கிறிஸ் கெயிலுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.
ரசிகர் கூட்டம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த சீசன்களில் சரியாக செயல்படவில்லை. அப்படி இருந்தும் அந்த அணிக்கு கடந்த மூன்று சீசன்களாக பஞ்சாபை தாண்டி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில்.
அதிரடி ஆட்டம்
அவரது ஆட்டத்தை பிடிக்காத கிரிக்கெட் ரசிகர்களே இருக்க முடியாது. அவர் தன் கிரிக்கெட் வாழ்வின் கடைசி நாட்களில் இருக்கிறார். ஆனால், இப்போதும் அதிரடி ஆட்டம் ஆடுவதில் அவர் சளைக்கவில்லை. ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஏன் வாய்ப்பு வழங்கவில்லை?
பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஏன் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை? கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முன்பை விடவும் நல்ல வீரர்களை அணியில் வைத்துள்ளது. கும்ப்ளே 2020 ஐபிஎல் ஏலத்தில் பார்த்து பார்த்து வீரர்களை தேர்வு செய்தார்.
கும்ப்ளே திட்டம்
அடுத்த சில ஆண்டுகளுக்கும் சேர்த்து பஞ்சாப் அணியை வளர்க்க முடிவு செய்துள்ள அனில் கும்ப்ளே இளம் வீரர்களுக்கு, இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அணியை கட்டமைத்துள்ளார். அதன் காரணமாகவே மயங்க் அகர்வாலை துவக்க வீரராக களமிறக்கி உள்ளார்.
ஷார்ஜாவிலும் வாய்ப்பில்லை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி எளிதாக சிக்ஸ் அடிக்கக் கூடிய ஷார்ஜா மைதானத்தில் நடந்தாலும், முதல் இரண்டு போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்த ராகுல் - மயங்க் அகர்வால் ஜோடியை பிரிக்க வேண்டாம் என்ற முடிவில் கிறிஸ் கெயிலுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
காயம் ஏற்பட்டால்..
பஞ்சப அணியில் டாப் ஆர்டரில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மட்டுமே கிறிஸ் கெயில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. அவர் பயிற்சிகளில் தீவிரமாக பங்கேற்ற போதும், அவரை மாற்று வீரராக மட்டுமே பார்க்கிறார் அனில் கும்ப்ளே. ரசிகர்கள் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.