ஐபிஎல் போட்டி
2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்தப் போட்டி நடந்த ஷார்ஜா மைதானம் எளிதாக சிக்ஸ் அடிக்கக் கூடிய மைதானம். அதனால், இரு அணிகளுமே அதிரடி ஆட்டம் ஆடின.
பஞ்சாப் ரன் குவிப்பு
ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் அணி துவக்கத்திலேயே அதிரடி வீரர் பட்லர் விக்கெட்டை இழந்தது.
ஸ்டீவ் ஸ்மித் - சஞ்சு சாம்சன்
அடுத்து ஸ்டீவ் ஸ்மித் - சஞ்சு சாம்சன் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். 9 ஓவர்களில் 100 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து இருந்தார். அவருக்கு பின் ராபின் உத்தப்பா களமிறங்கி இருக்க வேண்டும்.
திணறல் ஆட்டம்
ஆனால், உள்ளூர் வீரர் ராகுல் டேவாட்டியா களமிறக்கப்பட்டார். லெக் ஸ்பின்னர்களின் ஓவர்களில் சிக்ஸ் அடிக்குமாறு கூறி அவரை அனுப்பி இருந்தார் ராஜஸ்தான் அணி பயிற்சியாளர். ஆனால், ராகுல் பந்தை அடிக்கவே திணறினார்.
அழுத்தம்
எதிரில் சஞ்சு சாம்சனுக்கு அழுத்தம் ஏறிக்கொண்டே சென்றது. தேவைப்படும் ரன் ரேட் ஸ்மித் அவுட் ஆகும் போது 10இல் இருந்தது. ராகுல் திணறலால் அது 16க்கும் மேல் சென்றது. ஒரு கட்டத்தில் ராகுல் 19 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
ஸ்ட்ரைக் கொடுக்க மறுப்பு
அப்போது 16வது ஓவரை முதல் பந்தில் இருந்தே சந்தித்தார் சஞ்சு சாம்சன். அவர் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸ் அடித்தார். மூன்றாவது பந்தை தரையோடு அடித்த போதும் சிங்கிள் ரன் ஓட மறுத்து விட்டார் சாம்சன். ராகுல் பந்தை அடிக்கவே திணறி வருவதால் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்க மறுத்துவிட்டார்.
அவமானத்தில் ராகுல்
ராகுல் டேவாட்டியா முகம் அப்போது அவமானத்தால் இறுக்கமாக காணப்பட்டது ஏற்கனவே, பந்தை அடிக்க முடியாமல் அவமானம். அத்துடன் சாம்சன் வேறு சேர்ந்து கொண்டார். சாம்சன் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உத்தப்பா தான் அணியை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை. இடையே ராகுலை ரிட்டயர் ஆகும்படி கூட சொல்லலாம் என ஒரு திட்டம் விவாதிக்கப்பட்டது.
5 சிக்ஸ்
இந்த நிலையில், 3 ஓவரில் 51 ரன்கள் தேவை என்ற நிலையில் ராகுல் டேவாட்டியா 18வது ஓவரை சந்தித்தார். காட்ரல் பந்து வீசினார். பந்தை அடிக்கவே சிரமப்பட்ட ராகுல், இந்த ஓவரின் 5 சிக்ஸ் அடித்து அனைவரையும் வாயை பிளக்க வைத்தார்.
எழுந்து நின்று கை தட்டிய சாம்சன்
அவர் தொடர்ந்து நான்கு சிக்ஸ் அடித்த போது சஞ்சு சாம்சன் எழுந்து நின்று கை தட்டினார். ராகுல் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். வெற்றிக்கு 2 ரன் தேவை எனும் நிலையில் தான் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி இந்தப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாராட்டு
ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஐந்து நிமிடத்தில் ஒரு வீரர் மிகப் பெரும் அவமானத்தில் இருந்து மீண்டு வந்து அனைவரையும் வாய் பிளக்க வைத்த சம்பவம் எதுவும் நடந்ததாக நினைவில் இல்லை. அவர் ஆட்டமிழந்து சென்ற போது மொத்த ராஜஸ்தான் அணியும் எழுந்து நின்று கைதட்டி அவரது விடா முயற்சியை, போராட்டத்தை பாராட்டியது.