சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சரியான வாய்ப்பு இன்றி தவித்து வரும் வீரர். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆன அவர் 2015இல் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். அதன் பின் சுமார் மூன்றரை ஆண்டுகள் கழித்து தான் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்தது.
அடுத்த தோனி?
தோனி ஓய்வு பெற்ற நிலையில் இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி எழுந்தது. ரிஷப் பண்ட்டை பலரும் முன் மொழிந்தாலும், சஞ்சு சாம்சனுக்கும் ஆதரவு இருந்தது. பலரும் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி வருவதால் தோனிக்கு நிகரான வீரர் என கூறி வந்தனர்.
முதல் இரண்டு போட்டிகள்
இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் அதிரடி ஆட்டம் ஆடினார். 74 மற்றும் 85 ரன்கள் குவித்தார். சிக்ஸர் மழை பொழிந்து 2020 ஐபிஎல் தொடரின் நட்சத்திரமாக ஜொலித்தார். ஆனால், அவை அனைத்தும் இரண்டு போட்டிகளுக்கு மட்டுமே.
சொதப்பல்
அதன் பின் ஏழு இன்னிங்க்ஸ்களில் அவர் மோசமாக ஆடினார். அதில் பல முறை தேவையே இல்லாமல் அதிரடி ஆட்டம் ஆட முயன்று தன் விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டு முறை 25 ரன்களுக்கு மேல் எடுத்தார். மற்ற ஐந்து முறை ஒற்றை இலக்க ரன்களே எடுத்தார்.
பெங்களூர் போட்டி
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்தார் சஞ்சு சாம்சன். அவர் இந்த முறையும் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பா ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே அவரும் ஆட்டமிழந்தார்.
கடும் விமர்சனம்
இதை அடுத்து சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனம் எழுந்தது. சஞ்சு சாம்சன் பேட்டிங்கை நம்பவே முடியாது. அவர் தொடர்ந்து சிறப்பாக ஆட மாட்டார் என ரசிகர்கள் சஞ்சு சாம்சனை வறுத்து எடுத்து வருகின்றனர். பெங்களூர் போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது.