ஆர்எஸ்எஸ் இணை அமைப்பு குரல்
ஆர்எஸ்எஸ் இணை அமைப்பான சுவதேசி ஜக்ரான் மன்ச் என்ற அமைப்பு ஐபிஎல் தொடரில் சீன நிறுவன விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அதையும் மீறி அனுமதித்தால் ஐபிஎல் தொடரை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பி உள்ளது.
ஐபிஎல் தள்ளி வைப்பு
2020 ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் மற்றும் லாக்டவுன் காரணமாக அந்த தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. அதன் பின் நீண்ட தாமதத்திற்குப் பின் செப்டம்பரில் ஐபிஎல் துவங்க உள்ளது.
பிசிசிஐ திட்டம்
2020 டி20 தொடர் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் அந்த கால இடைவெளியில் ஐபிஎல் தொடரை பிசிசிஐ திட்டம் வகுத்து செயல்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்த உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தீர்வு கிடைக்காத நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், ஊழியர்களை பாதுகாக்கும் பொறுப்பும் பிசிசிஐக்கு உள்ளது.
முன்னெச்சரிக்கை
நோய் பாதிப்பில் இருந்து அவர்களை காக்க முன்னெச்சரிக்கை விதிமுறைகளை வகுத்து இருக்கிறது பிசிசிஐ. இந்த சிக்கல்கள் ஒருபுறம் இருக்க சீன விளம்பரங்களுக்கு இருக்கும் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது பிசிசிஐ.
பதற்றம்
இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் பலியானதை அடுத்து சீன நிறுவனங்களுக்கு எதிரான எதிர்ப்பு மனநிலை உருவாகி இருக்கிறது.
ஐபிஎல் புறக்கணிப்பு
ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான சுவதேசி ஜக்ரான் மன்ச் தொடர்ந்து சீன நிறுவனங்கள் புறக்கணிப்பை வலியுறுத்தி வரும் நிலையில், ஐபிஎல் தொடரிலும் சீன நிறுவன விளம்பரங்கள் இடம் பெறுவதை எதிர்த்து வருகிறது. மேலும், சீன நிறுவன விளம்பரங்களை தவிர்க்காவிட்டால் ஐபிஎல் தொடரை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறி உள்ளது.
வருவாய் இழப்பு
சீனாவை சேர்ந்த விவோ மொபைல் நிறுவனம் தான் ஐபிஎல் தொடரின் முக்கிய ஸ்பான்சர். அது தவிர்த்து மேலும் சில சீன முதலீடு கொண்ட நிறுவனங்களின் விளம்பரங்களையும் ஐபிஎல் பெற்றுள்ளது. அவற்றை நீக்கிவிட்டு ஐபிஎல் தொடரை நடத்தினால் பெரிய அளவில் விளம்பர வருவாயை இழக்கும் நிலையில் உள்ளது பிசிசிஐ.
காங்கிரஸ் ட்வீட்
ஆர்எஸ்எஸ் துணை அமைப்பின் அழுத்தம் ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சர்ஜேவாலா பதிவிட்டுள்ள ட்வீட்டில், "கிரிக்கெட் - சீனா - லாபம் மற்றும் இரட்டை தரம்" எனக் கூறி பாஜகவை சாடி உள்ளார். சீன விளம்பர விவகாரம் அரசியலாகும் நிலையில், ஐபிஎல் கடும் சிக்கலில் உள்ளது.