சிஎஸ்கே அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் பத்து போட்டிகளில் ஏழு தோல்விகளை சந்தித்துள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியால் பிளே-ஆஃப் செல்ல முடியாத நிலை உருவாக இன்னும் ஒரு தோல்வி போதும்.
கேதர் ஜாதவ் நீக்கம்
அந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து மோசமாக ஆடி வந்ததே இந்த தோல்விகளுக்கு முக்கியமான காரணம். அதிலும் எட்டு போட்டிகளில் பங்கேற்ற கேதர் ஜாதவ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரை இடையே இரண்டு போட்டிகளில் மட்டும் நீக்கினார் கேப்டன் தோனி.
மீண்டும் அணியில் சேர்ப்பு
ஆனால், மீண்டும் கேதர் ஜாதவ்வுக்கு கடைசி இரண்டு போட்டிகளில் வாய்ப்பு அளித்தார் தோனி. ஒரு போட்டியில் ஜாதவ்வை கடைசி வரை பேட்டிங் ஆட வைக்காமல் சமாளித்தார் தோனி. அடுத்த போட்டியில் கடைசி ஓவர்களில் ஜாதவ் பந்தை அடிக்க முடியாமல் சொற்ப ரன்களே எடுத்து வெறுப்பேற்றினார்.
ருதுராஜ் கெயிக்வாட்
இளம் வீரர்களின் வாய்ப்பைத் தான் தோனி, பார்ம் அவுட்டாகி இருக்கும் கேதர் ஜாதவ்வுக்கு அளித்து வந்தார். ருதுராஜ் கெயிக்வாட் இந்த சீசனில் இரண்டு போட்டிகளில் பேட்டிங் ஆடும் வாய்ப்பை பெற்றார். அதில் அவர் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினாலும் அவருக்கு ஜாதவ்வுக்கு பதில் ஆட வாய்ப்பு அளித்திருக்கலாம்.
ஜெகதீசன்
மற்றொரு இளம் வீரர் ஜெகதீசன், கேதர் ஜாதவ் நீக்கப்பட்ட உடன் அணியில் வாய்ப்பு பெற்றார். சேஸிங்கில் சற்று தடுமாறினாலும் அவர் 28 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார். அடுத்த போட்டியில் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டது.
தோனி சொன்ன காரணம்
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது, அப்போது பேசிய தோனி, இளம் வீரர்கள் உத்வேகத்துடன் ஆடாததால், மூத்த வீரர்களை தொடர்ந்து அணியில் தக்க வைக்க நேர்ந்தது என்றார்.
வாய்ப்பே கொடுக்காமல்..
இளம் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்காமல் அவர்கள் சரியாக ஆடவில்லை என கேப்டன் தோனி கூறியது அதிர்ச்சி அளித்தது. அதிலும் ஜெகதீசன் தன் முதல் போட்டியில் 33 ரன்கள் எடுத்தும் அடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மனம் உடைந்து இருப்பார்கள்
வாய்ப்பே அளிக்காமல் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக இளம் வீரர்களை கூறிய நிலையில், ருதுராஜ் கெயிக்வாட், ஜெகதீசன் மனநிலை எப்படி இருக்கும் என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். தோனி போன்ற ஒரு ஜாம்பவான் தங்களை சரியாக ஆடவில்லை எனக் கூறி உள்ள நிலையில் அவர்கள் மனம் உடைந்து இருப்பார்கள் என சுட்டிக் காட்டுகின்றனர்.
ஜாதவ்வுக்காக..
கேதர் ஜாதவ்வுக்கு அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காவே இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை. ஜாதவ் 8 போட்டிகளில், 5 இன்னிங்க்ஸ்களில் பேட்டிங் செய்து 62 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் ஸ்ட்க்ரைக் ரேட் 93.93 மட்டுமே.
ரசிகர்கள் கேள்வி
இந்த நிலையில், எந்த வகையில் ஜெகதீசன், ருதுராஜ் கெயிக்வாட்டை விட ஜாதவ் சிறந்த வீரர் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சிஎஸ்கே அணியில் பல தவறான முடிவுகள் எடுக்கப்பட்டதே தோல்விகளுக்கு காரணம். இளம் வீரர்கள் அல்ல என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.