சிஎஸ்கே நிலை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020 ஐபிஎல் தொடரில் மிக தாமதமாகவே விழித்துக் கொண்டது. அமீரகத்தில் உள்ள ஆடுகளங்களின் சூழ்நிலையை மற்ற அணிகள் ஓரளவு கணித்த நிலையில் சிஎஸ்கே அணி தங்களிடம் உள்ள வீரர்களை வைத்துக் கொண்ட அந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஆட முடியாமல் தவித்தது.
மாறும் ஆடுகளங்கள்
ஆனால், தற்போது அங்குள்ள ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு ஏற்ப மாறி வருகின்றன. கிட்டத்தட்ட சென்னை சேப்பாக்கம் மைதானம் போலவே மந்தமாக மாறி உள்ளன. தங்களின் சொந்த மைதானமான சேப்பாக்கம் போலவே மாறி இருப்பதால் சிஎஸ்கே அணி உற்சாகம் அடைந்துள்ளது.
கூடுதல் சுழற் பந்துவீச்சாளர்
கடந்த சீசன்களில் சிஎஸ்கே அணியில் கூடுதல் சுழற் பந்துவீச்சாளர் எப்போதும் இடம் பெறுவார். அதுதான் சிஎஸ்கே அணியின் பலம். பந்துவீச்சாளர்களை மாற்றிக் கொண்டே இருப்பார் தோனி. அது எதிரணிகளை குழப்பும். இந்த சீசனில் முதல் சில போட்டிகளில் ஆடுகளம் காரணமாக சிஎஸ்கே அணியால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
அணியை மாற்ற வேண்டும்
சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறியதால் ஹைதராபாத் போட்டியில் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் அணியில் கூடுதல் சுழற் பந்துவீச்சாளராக பியுஷ் சாவ்லாவை தேர்வு செய்தனர். ஆனால், யாரை அணியை விட்டு நீக்குவது? என்ற குழப்பம் ஏற்பட்டது.
ஒரே ஒரு மாற்றம்
அப்போது தான் சிஎஸ்கே அணியில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. கூடுதல் பேட்ஸ்மேனாக அணியில் இடம் பெற்று இருந்த ஜெகதீசன் நீக்கப்பட்டார். பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்த சாம் கர்ரன் துவக்க வீரராக மாற்றப்பட்டார். அதுதான் இந்த திட்டத்தின் மிகப் பெரிய உச்சம். அதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த ஒரு வீரரை வைத்து மொத்த சிஎஸ்கே அணியின் திட்டமும் மாறியது.
அதிரடி ஆட்டம்
சாம் கர்ரன் ஹைதராபாத் போட்டியில் துவக்க வீரராக இறங்கி முதலில் நிதானம் காட்டினாலும் பின் அதிரடி ஆட்டம் ஆடி பவர்பிளே ஓவர்களில் அதிக ரன் குவித்தார். 21 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார் சாம் கர்ரன். அது சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் உதவியது.
ஏழு பந்துவீச்சாளர்கள்
பேட்டிங் ஆர்டரை சாம் கர்ரனை வைத்து சமாளித்த தோனி, ஏழு பந்துவீச்சாளர்களை ஆட வைத்து தன் திட்டத்தை நிறைவேற்றினார். தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, கரன் சர்மா, பியுஷ் சாவ்லா, டிவைன் பிராவோ என ஏழு பேரும் ஹைதராபாத் போட்டியில் பந்து வீசினர்.
ஜெகதீசன் நிலை
ஜெகதீசன் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடிய நிலையில் நீக்கப்பட்டார். அவர் அந்தப் போட்டியில் நிதான ஆட்டம் ஆடினாலும் 30 ரன்களுக்கும் மேல் எடுத்தார். அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என ரசிகர்கள் விமர்சனம் செய்த வருகின்றனர். ஆனால், அணியில் அதிக பந்துவீச்சாளர்கள் தேவை என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
ஜடேஜா பந்துவீச்சு
ரவீந்திர ஜடேஜா முதல் சில போட்டிகளில் பந்துவீச்சில் சொதப்பினார். ஆனால், ஹைதராபாத் போட்டியில் சிறப்பாக பந்துவீசினார். அவர் பேட்டிங்கிலும் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு கை கொடுத்து வருகிறார். சாம் கர்ரனை அடுத்து சிஎஸ்கே அணியின் பலமாக இருப்பவர் ஜடேஜா தான்.
வெற்றி அவசியம்
என்னதான் அணியை சிறப்பாக மாற்றினாலும், எதிரணிகளை அச்சுறுத்தினாலும் இறுதியில் வெற்றி தான் முக்கியம். நன்றாக ஆடினாலும் தோல்வி அடைந்தால் சிஎஸ்கே அணியால் பிளே-ஆஃப் செல்ல முடியாது. இதை தோனி உணர்ந்தே தன் போராட்டத்தை தாமதமாக துவக்கி இருக்கிறார்.