சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார், அவரை கிரிக்கெட் வீரர் என்பதை விட வர்ணனையாளராகவே பலருக்கும் தெரியும். அந்த அளவுக்கு கடந்த ஆண்டுகளில் தீவிரமாக கிரிக்கெட் வர்ணனை மற்றும் விமர்சனம் செய்து வந்தார்.
மும்பை சார்பு
மும்பை வீரரான அவர், இந்திய அணியில் ஆடும் மும்பை வீரர்களுக்கு சாதகமாக பேசுவதாக பலரும் பல முறை கூறி உள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில் கூட அவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோஹித் சர்மாவை பற்றி அளவுக்கு அதிகமாக பாராட்டி வந்தார்.
ரசிகர்கள் வெறுப்பு
அது போன்ற சமயங்களில் ரசிகர்கள் அவரது செயல்பாட்டை இணையத்தில் விமர்சித்து, திட்டி வந்தனர். பல சமயங்களில் இத்தனை எதிர்ப்பையும் மீறி அவரை எப்படி வர்ணனை செய்ய அனுமதிக்கிறார்கள் என தோன்றும்அளவுக்கு ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
ஜடேஜா சர்ச்சை
அவர் கடந்த ஆண்டு இரண்டு முக்கிய சர்ச்சைகளில் சிக்கினார். 2௦19 உலகக்கோப்பை தொடரின் போது ஜடேஜாவை முழுமையான கிரிக்கெட் வீரர் இல்லை என்பதை குறிக்கும் வகையில் "bits and pieces" வீரர் என குறிப்பிட்டார். அதற்கு ஜடேஜா கடும் பதிலடியும் கொடுத்தார்.
ஹர்ஷா போக்ளே
அடுத்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுக்கு கிரிக்கெட் ஆடிய அனுபவம் இல்லை என்பதை ஒரு விவாதத்தின் போது சுட்டிக் காட்டி அவர் பேசிய கருத்துக்கு மறுப்பு கூறி அதிர்ச்சி அளித்தார். அதற்கு பின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
திடீர் நீக்கம்
இந்த நிலையில், அவரை பிசிசிஐ திடீரென வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடருக்கான வர்ணனையாளர் குழுவில் அவரது பெயர் இடம் பெறவில்லை.
மற்ற வர்ணனையாளர்கள்
மற்ற பிசிசிஐ வர்ணனையாளர்கள் சுனில் கவாஸ்கர், முரளி கார்த்திக், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து வர்ணனை குழுவில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருந்த தரம்சாலாவுக்கு வருகை தந்தனர். சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மட்டுமே அங்கே வரவில்லை.
ஐபிஎல் தொடரிலும் இல்லை
அதே போல, ஐபிஎல் தொடரிலும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பெயர் வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதற்கு காரணம், ஜடேஜா விஷயம், ஹர்ஷா போக்ளே மீதான கருத்து ஆகியவை தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கங்குலி முடிவா?
கங்குலி ஒரு முறை சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் வர்ணனையை கிண்டல் செய்து பெயர் போடாமல் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதே போல, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கங்குலியை வெளிப்படையாக கிண்டல் செய்துள்ளார். இருவருக்கும் கருத்து ஒற்றுமை இல்லை எனஎன்பதால், பிசிசிஐ தலைவர் கங்குலி அவரை பணி நீக்கம் செய்திருப்பாரா? என்ற கோணத்திலும் சிலர் கருத்து கூறி உள்ளனர்.
Recommended Video
பிசிசிஐ அதிகாரி விளக்கம்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கம் குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் கேட்ட போது, அவரது வேலையில் மகிழ்ச்சி இல்லை என்பதால் அவரை பிசிசிஐ நீக்கி உள்ளது என்று மட்டுமே கூறினார்கள். இந்த நீக்கத்தை ரசிகர்கள் பலர் பாராட்டி, கொண்டாடி வருகிறார்கள்.