திட்டு வாங்கிய வர்ணனையாளர்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எப்போதும் சர்ச்சையான முறையில். ஒரு சார்பாக வர்ணனை செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் அதிகம் திட்டு வாங்கிய கிரிக்கெட் வர்ணனையாளர் அவராகத் தான் இருக்க முடியும்.
ரசிகர்கள் கோரிக்கை
எனினும், அவர் தொடர்ந்து பிசிசிஐ வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். அவரை நீக்குமாறு கடந்த மூன்று ஆண்டுகளில் பல முறை ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சூழ்நிலையில், 2019 உலகக்கோப்பை தொடரில் அவராகவே வாயை விட்டு மாட்டிக் கொண்டார்.
ஜடேஜா முக்கியத்துவம் இல்லாத வீரர்
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஜடேஜா முதல் சில போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதைப் பற்றி பேசும் போது ஒரு போட்டியில், ஜடேஜா முக்கியத்துவம் இல்லாத வீரர் என்ற பொருள்படும் படி "bits and pieces" என ஆங்கிலத்தில் குறிப்பிட்டார் மஞ்ச்ரேக்கர்.
ஹர்ஷா போக்ளே சர்ச்சை
அதைத் தொடர்ந்து இந்திய அணியின் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியின் போது ஒரு விவாதத்தில் முக்கிய கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவின் தகுதி பற்றி பேசி சர்ச்சையைக் கிளப்பினார். பின்னர் அவரிடம் மன்னிப்பு கோரினார்.
பிசிசிஐ நீக்கம்
இப்படி அவராகவே பெரிய சர்ச்சைகளில் சிக்கியதால் பிசிசிஐ கடந்த மார்ச் மாதம் இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் போது அவரை வர்ணனையாளர் பணியில் இருந்து நீக்கி இருந்தது. அப்போதே கடும் அதிர்ச்சி அடைந்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
தொலைக்காட்சி எடுத்த முடிவு
பிசிசிஐ நீக்கினாலும், கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி விரும்பினால் அவர்களின் வர்ணனையாளர் பட்டியலில் சேர முடியும். ஆனால், அதற்கும் தற்போது வழியில்லை. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அவரை 2020 ஐபிஎல் தொடருக்கான வர்ணனையாளர் பதவியில் சேர்த்துக் கொள்ளவில்லை.
ஆங்கிலம்
இந்த நிலையில், இது பற்றி பேசிய அவர் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் வேறு அர்த்தத்தில் இருக்கும். அதை ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கொண்ட இந்தியர்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள். சச்சின் இருக்கும் அறையில் சிக்கல்கள் இருக்கும் என்பதை, ஒரு அறையில் யானை இருப்பதை போன்றது எனக் கூறினேன்.
வெள்ளை யானை
சிலர் அதை தவறாக புரிந்து கொண்டு, நான் சச்சினை வெள்ளை யானை என கூறியதாக, அவரை குறைத்து மதிப்பிட்டதாக கருதினார்கள். பிட்ஸ் அண்டு பீசஸ் என்பதற்கு பதிலாக, ஸ்பெஷலிஸ்ட் அல்லாத வீரர் என நான் (ஜடேஜாவை) கூறி இருந்தால் இத்தனை எதிர்ப்பு எழுந்து இருக்காது என புலம்பினார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
சிறிய பணிகள்
முக்கியமான வர்ணனையாளர் பதவியை இழந்தாலும் கிரிக்கெட் இணையதளம், செய்தி தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிக்கை ஆகியவற்றில் 2020 ஐபிஎல் பற்றி தன் கருத்துக்களை முன் வைக்க இருக்கிறார். இனி அவர் மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக மாற முடியுமா?