சிஎஸ்கே நாளை பயிற்சி
ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் 19ம் தேதி யூஏஇயின் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் துவங்கி நடைபெறவுள்ளன. இதையொட்டி 8 அணிகளை சேர்ந்த வீரர்களும் யூஏஇக்கு பயணம் மேற்கொண்டு அங்கு தங்களது குவாரன்டைனை முடித்துக் கொண்டு தற்போது பயிற்சி ஆட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சிஎஸ்கே அணி மட்டும் நாளை முதல் பயிற்சிகளை துவங்கவுள்ளது.
அட்டவணையை வெளியிட வலியுறுத்தல்
ஐபிஎல் போட்டிகள் துவங்க இன்னும் 15 நாட்களே உள்ளன. இந்நிலையில் அதன் அட்டவணையை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் பிசிசிஐ-ஐ வலியுறுத்தி வந்தன. இதன்மூலம் தாங்கள் தங்களது திட்டங்களை வகுக்க முடியும் என்றும் தெரிவித்து வந்தன. ஆனால் சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா, அபுதாபியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரங்களால் அட்டவணையை பிசிசிஐ வெளியிடாமல் இருந்துவந்தது.
பிசிசிஐ தலைவர் அறிவிப்பு
இந்நிலையில் தற்போது பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி நாளை ஐபிஎல் 2020ன் அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். இதன்மூலம் எந்த போட்டி முதலில் நடக்கும், எந்தப் போட்டிகள் பிற்பகலில் நடக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அட்டவணை மூலம் அணிகள் தெளிவுபெறும். ரசிகர்களும் தங்களுக்கு பிடித்தமான அணிகள் எப்போது விளையாடுவார்கள் என்று அறிய முடியும்.
ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யும் பிசிசிஐ
இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் யூஏஇயில் நடைபெறவுள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல்லில் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகின்றன. ஸ்பான்சர்ஷிப்பில் ஆரம்பித்து அட்டவணை வரை எல்லாவற்றிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்த பிசிசிஐ தற்போது ஒவ்வொன்றாக தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.