ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 2018ஆம் ஆண்டு தடையில் இருந்து மீண்டு வந்து பிளே-ஆஃப் வரை முன்னேறியது. அப்போது அஜின்க்யா ரஹானே கேப்டனாக இருந்தார். அடுத்த ஆண்டு அவரது கேப்டன்சியில் அந்த அணி தடுமாறியது.
கேப்டன் மாற்றம்
2019 ஐபிஎல் தொடரின் பாதியில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது அணியின் விளம்பர தூதர் ஷேன் வார்னேவின் திட்டத்தால் தான் ஸ்டீவ் ஸ்மித் பாதி தொடரில் கேப்டன் ஆனார் என கூறப்பட்டது. பின்பாதியில் ராஜஸ்தான் சிறப்பாக ஆடினாலும் அந்த அணியால் அப்போது பிளே-ஆஃப் செல்ல முடியவில்லை.
பிளே-ஆஃப் சென்றே ஆக வேண்டும்
இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக அறிவித்தது. ரஹானேவை அணியை விட்டு நீக்கியது. அடுத்ததாக ஷேன் வார்னேவை அணியின் செயல்பாடுகளில் பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டது
உள்ளே வந்த வார்னே
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2008இல் ஐபிஎல் கோப்பை வெல்ல வைத்த ஷேன் வார்னே இந்த முறையும் வெல்ல வைப்பார் என அந்த அணி நிர்வாகம் நம்புகிறது. இதை அடுத்து அவர் விளம்பர தூதர் என்பதை தாண்டி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
கேப்டன், கோச்
ஷேன் வார்னே ஏற்கனவே தன் பேச்சை கேட்கும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டை அணியில் வைத்துள்ளார். ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஷேன் வார்னேவுடன் ஆஸ்திரேலியாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே அணியில் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷார்ஜா திட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளை ஷார்ஜா மைதானத்தில் ஆடுகிறது. அந்த மைதானம் சிறியது என்பதால் எளிதாக சிக்ஸ் அடிக்கலாம். இதை கணக்கிட்டு அணித் தேர்வு முதல் பந்துவீச்சு வரை திட்டமிட்டுக் கொடுத்தார் ஷேன் வார்னே.
வார்னே திட்டம் வெற்றி
சிஎஸ்கே அணிக்கு எதிராக முதல் போட்டியில் 216 ரன்கள் எடுத்து, 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான். அடுத்து பஞ்சாப் அணியை முதலில் பேட்டிங் ஆட வைத்து, 224 ரன்கள் என்ற மெகா இலக்கை வார்னேவின் திட்டப்படி சேஸிங் செய்து வென்றது அந்த அணி.
ஸ்டீவ் ஸ்மித் நிம்மதி
ஷேன் வார்னே திட்டங்கள் வெற்றி பெற்று வருவதால் நிம்மதியாக இருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். அவர் அணியில் மாற்றம் செய்வது, பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வது என எதைக் குறித்தும் பெரிதாக கவலைப்படாமல், வார்னே மீது நம்பிக்கை வைத்து தன் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.