சிஎஸ்கே நிலை
2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி பல தோல்விகளை சந்தித்தது. முதல் அணியாக பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. இதற்கு முன் சிஎஸ்கே அணி பங்கேற்ற 10 சீசன்களில் ஒரு முறை கூட பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்ததே இல்லை.
மூன்று வெற்றிகள்
இந்த தொடரில் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த பின் சிஎஸ்கே அணி கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. அது மட்டுமே சிஎஸ்கே அணிக்கு ஆறுதலாக அமைந்தது. அந்த அணியில் பல அனுபவ வீரர்கள் பார்ம் அவுட் ஆனது தான் தோல்விகளுக்கு காரணம்.
ஷேன் வாட்சன் செயல்பாடு
அதில் ஒரு வீரர் ஷேன் வாட்சன். துவக்க வீரரான அவர் இந்த சீசனில் துவக்கத்தில் மோசமாக செயல்பட்டு வந்தார். அவரால் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. பல போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து அவரை அணியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்தார் கேப்டன் தோனி.
விமர்சனம்
ஷேன் வாட்சனுக்கு வயதாகி விட்டது என்ற விமர்சனம் மீண்டும் எழுந்தது. அவர் கடந்த சீசனில் துவக்கத்தில் இதே போல சொதப்பினாலும், பிளே-ஆஃப் சுற்றில் சிறப்பாக ஆடி இருந்தார். இந்த சீசனில் தொடர் தோல்விகள் அவருக்கான அதிக வாய்ப்புக்களை அளிக்க விடாமல் செய்தது.
கடைசி போட்டிக்கு பின்..
இந்த சீசனில் சிஎஸ்கே அணி மோசமாக செயல்பட்ட நிலையில், ஷேன் வாட்சன் சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டிக்கு பின் டிரஸ்ஸிங் அறையில் தன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். ஏற்கனவே, சர்வதேச கிரிக்கெட்டில் 2018இல் அவர் ஓய்வு பெற்று இருந்தார்.
அறிவிப்பு
அதன் பின் டி20 லீக் தொடர்களில் மட்டுமே அவர் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் மோசமான இந்த சீசனுடன் அவர் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிப்பதாக சிஎஸ்கே வீரர்கள் மத்தியில் அறிவித்து இருக்கிறார்.
உணர்ச்சிவசப்பட்டார்
இந்த முடிவை அவர் அறிவித்த போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஷேன் வாட்சன் இதுவரை 145 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் சிஎஸ்கே அணிக்காக மட்டும் 43 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
ரசிகர்கள் சோகம்
ஷேன் வாட்சன் ஓய்வு அறிவிப்பு பற்றி அறிந்த சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். கடந்த 2018 மற்றும் 2019 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருந்தார் வாட்சன். 2019 இறுதிப் போட்டியில் ரத்தம் சிந்தி அவர் பேட்டிங் செய்ததை ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.
முக்கியமான வீரர்
2018 ஐபிஎல் சீசனில் தான் ஷேன் வாட்சன் சிஎஸ்கே அணியில் முதன்முறையாக இணைந்தார். அந்த சீசனில் இறுதிப் போட்டியில் அவர் சதம் அடிக்க சிஎஸ்கே அணி கோப்பை வென்றது. 2019 ஐபிஎல் தொடரிலும் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு மிக அருகே எடுத்துச் சென்றார் வாட்சன்.
மாற்று வீரர் யார்?
சிஎஸ்கே அணியில் ஷேன் வாட்சன் இடத்தை பிடித்திருக்கும் வீரர் ருதுராஜ் கெயிக்வாட். இளம் வீரரான அவர் கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்து சிஎஸ்கே அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.