கிரிக்கெட் போட்டிகள் நிலை
உலகில் கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்று நோய் காரணமாக மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த நோய் கூட்டமாக மக்கள் கூடும் இடங்களில் பரவும் அபாயம் இருப்பதால் விளையாட்டுப் போட்டிகள் பெரிதும் தடைப்பட்டுள்ளன. இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
2020 ஐபிஎல் தள்ளி வைப்பு
2020 ஐபிஎல் தொடர் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு ஐபிஎல்-இன் சிறந்த வீரர்கள் குறித்து விவாதம் செய்து பட்டியலிட்டது. அதில் சிறந்த வீரரான ஷேன் வாட்சன் பற்றி கெவின் பீட்டர்சன், கௌதம் கம்பீர் பாராட்டிப் பேசினர்.
வாட்சன் ஆட்டம்
துவக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்தார் ஷேன் வாட்சன். அப்போது அந்த அணி முதல் சீசனில் கோப்பை வென்றது. அதன் பின் சில ஆண்டுகள் கழித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் இருந்தார். பின் சில காலம் மோசமான பார்ம் அவுட்டில் இருந்த அவர் 2018இல் சிஎஸ்கே அணிக்கு வந்து சேர்ந்தார்.
அபார ஆட்டம்
2018 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வெற்றி பெற வைத்தார் ஷேன் வாட்சன். அதே போல 2019 ஐபிஎல் தொடரில் ரத்தம் வந்தாலும் பொருட்படுத்தாமல் ஆடி, வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். மேலும், இரண்டு முறை ஐபிஎல் தொடர் நாயகன் விருதை வென்ற ஒரே வீரர் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரன் குவிப்பு
இதுவரை 134 ஐபிஎல் போட்டிகளில் 3,575 ரன்கள் குவித்துள்ளார் ஷேன் வாட்சன். அவரது ஸ்ட்ரைக் ரேட் 139.53 ஆகும். அடிப்படையில் வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் என்றாலும், சமீப காலமாக அவரது உடல்நிலை காரணமாக அவரால் பந்துவீச முடியவில்லை. எனினும், பேட்டிங்கில் கலக்கி வருகிறார்.
கெவின் பீட்டர்சன் என்ன சொன்னார்?
கெவின் பீட்டர்சன் அவரைப் பற்றி கூறுகையில், அவர் பந்துவீச்சு அவரை விட்டு சென்ற பின் அவரது பேட்டிங் இன்னும் சிறப்பாக மாறியது. அத்தனை சிறப்பு வாய்ந்த வீரர் அவர். நான் அவருடன் இரண்டு ஆண்டுகள் ஆடி உள்ளேன். அவர் முதுகில் எந்த காயமும் ஏற்படாத இளம் வீரர் போல வேகமாக பந்து வீசுவார்" என்றார்.
மேஜிக்
கௌதம் கம்பீர் கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஷேன் வாட்சன் தான் சிறந்த வீரர். ஏனெனில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் அவர் மேஜிக் செய்துள்ளார்." என்றார்.
ஒட்டுமொத்த தாக்கம் அபாரம்
மேலும், இரண்டாம் பாதியில் அவரது பந்துவீச்சு சரிந்து விட்டது. ஆனால், இந்த விளையாட்டு மீதான அவரது ஒட்டுமொத்த தாக்கம் அப்படியே தக்க வைத்துள்ளார். இரண்டு, மூன்று ஆண்டுகளில் சிறந்த வீரர் என்று மட்டும் கேட்டால் ஆண்ட்ரே ரஸ்ஸல என்பேன். ஆனால், ஒட்டு மொத்தமாக ஷேன் வாட்சன் தான் சிறந்த வீரர்" என்றார் கம்பீர்.