கோப்பை வென்ற வீரர்
ஷேன் வாட்சன் 2008ஆம் ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றார். அந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பை வென்றது. அந்த அணியில் ஆல் - ரவுண்டராக பங்களித்த ஷேன் வாட்சன் முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர் ஆனார்.
சிறப்பான ஆட்டம் ஆடினார்
அதன் பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இரு ஆண்டுகள் ஆடினார். அதில் ஒருமுறை அந்த அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. இப்படி பல அணிகளில் சிறப்பான ஆட்டம் ஆடிவிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2018 முதல் இடம் பெற்று வருகிறார் ஷேன் வாட்சன்.
வாட்சனிடம் பேட்டி
தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் வீரர்களிடம் சமூக வலைதளங்களில் பேட்டி எடுத்து ஒளிபரப்பி வருகிறது. சமீபத்தில் ஷேன் வாட்சனிடம் பேட்டி எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேள்வி
அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்ற அணிகளிடம் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார் ஷேன் வாட்சன். அப்போது கடந்த சீசனில் தான் சரியாக ஆடாத போதும் தன் மீது நம்பிக்கை வைத்த தோனி பற்றி நெகிழ்ச்சியாக பேசினார்.
நம்பிக்கை வைத்தனர்
"10 போட்டிகளில் ரன்னே எடுக்காவிட்டாலும், தொடர்ந்து அணியில் தேர்வு செய்யப்படுவீர்கள். கடந்த சீசனில் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தோனி மற்றும் ஸ்டீபன் பிளெம்மிங்கிற்கு நன்றி" என சிஎஸ்கே அணியின் சிறப்பு பற்றி கூறி தோனிக்கு நன்றி கூறினார் வாட்சன்.
மற்ற அணிகள்
"மற்ற அணிகள் என்றால் "உங்கள் கதை முடிந்தது. வந்ததற்கு நன்றி. ஆனால், நீங்கள் வெளியே தான் உட்கார வேண்டும். மேலும், ட்ரிங்க்ஸ் கொடுக்க செல்ல வேண்டும்" என கூறி இருப்பார்கள்" என மற்ற அணிகளாக இருந்தால் என்ன செய்து இருப்பார்கள் என கூறினார் ஷேன் வாட்சன்.
நீக்கி விடுவார்கள் என நினைத்தேன்
"கடந்த சீசன் முழுவதும் நான் நன்றாக பேட்டிங் செய்ததாகவே நினைத்தேன். ஆனால், ரன் குவிக்கவில்லை. அது அப்படியே நீடித்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இன்னும் இரண்டு போட்டிகளில் அவர்கள் என்னை நீக்கி விடுவார்கள் என நினைத்தேன். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை" என்றார் வாட்சன்.
நன்றி கூறினேன்
"பின்னர் ஒரு கட்டத்தில் விஷயங்கள் மாறியது. அப்படி ஆகும் என எனக்கு தெரியும். அப்போது நான் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தோனி மற்றும் பிளெம்மிங்கிற்கு நன்றி கூறினேன். அவர்கள் என் மீது எந்த சந்தேகமும் ஏற்படவில்லை என்றார்கள்" எனக் கூறினார் வாட்சன்.
அருமையான தலைமை
"அது அற்புதமானது. அது என்னை 10 அடி உயரத்திற்கு உயர்த்திச் சென்றது. அதுதான் அருமையான தலைமையின் சக்தி. எப்போது ஒருவரை நம்ப வேண்டும் என தெரிந்து வைத்திருப்பது அபாரமான விஷயம். அவர்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்" என்றார் ஷேன் வாட்சன்.
இறுதிப் போட்டி ஆட்டம்
கடந்த சீசனில் லீக் சுற்றில் சரியாக ஆடாமல் போனாலும், இறுதிப் போட்டியில் காயம் ஏற்பட்டு, ரத்தம் வடிய அபாரமாக பேட்டிங் ஆடினார் ஷேன் வாட்சன். இறுதிப் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தாலும் வாட்சன் மீது ரசிகர்கள் பெரும் மரியாதை கொண்டனர்.