டெல்லி கேபிடல்ஸ்
டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்த டெல்லி ஐபிஎல் அணி, கடந்த சீசனில் பெயரை டெல்லி கேபிடல்ஸ் என மாற்றியது. அத்துடன் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மட்டும் போதாது என முக்கிய மாற்றம் ஒன்றை செய்தது.
ஆலோசகர் ஆன கங்குலி
டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டார். அவரும், ரிக்கி பாண்டிங்கும் சேர்ந்து டெல்லி அணியை கடந்த சீசனில் சிறப்பாக வழிநடத்தினர். அந்த அணி பிளே-ஆஃப் வரை முன்னேறியது. அது நல்ல முன்னேற்றமாக கருதப்பட்டது.
பிசிசிஐ தலைவர் பதவி
அதன் பின் கங்குலி பிசிசிஐ தலைவராக பதவி பெற்றதை அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். அதற்கு முன்னதாக அஸ்வின் மற்றும் அஜின்க்யா ரஹானேவை மற்ற அணிகளில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வர வைத்தார்.
டெல்லி கேபிடல்ஸ் போட்டி
இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி தன் முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்தித்தது. அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் சிறப்பாக செயல்பட்டு தோற்க வேண்டிய போட்டியை டை செய்து, சூப்பர் ஓவரில் வென்றது டெல்லி.
ஸ்ரேயாஸ் ஐயர் என்ன சொன்னார்?
டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தப் போட்டியில் டாஸ் போடும் போது பேசியது தான் சர்ச்சையாகி உள்ளது. அப்போது அவர் தான் கேப்டனாக திறமையை வளர்த்துக் கொள்ள ரிக்கி பாண்டிங், சவுரவ் கங்குலி தனக்கு உதவியதாக குறிப்பிட்டார்.
கங்குலி இப்போதும் உதவுகிறார்?
அடுத்து, அவர்கள் இப்போதும் என்னுடன் இருப்பது என் அதிர்ஷ்டம் என குறிப்பிட்டார். அவர் தனக்கு கங்குலி உதவினார் என்று கூறியது கடந்த சீசனில் கங்குலி அவருடன் இருந்தது என புரிந்து கொள்ள முடிந்தாலும், "இப்போதும்" தன்னுடன் இருப்பதாக அவர் கூறியது வினையாக மாறியது.
சர்ச்சை
பிசிசிஐ தலைவராக உள்ள கங்குலி, டெல்லி கேபிடல்ஸ் எனும் ஒரு ஐபிஎல் அணிக்கு எப்படி ஆலோசனை வழங்கலாம் என்ற கேள்வி எழுந்தது. இது பற்றி சிலர் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். ஐபிஎல் வட்டாரத்தில் லேசான சலசலப்பு கிளம்பியது.
பதறிய ஸ்ரேயாஸ் ஐயர்
இந்த நிலையில், பதறியடித்துக் கொண்டு தன் பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். தனிப்பட்ட முறையில் கேப்டனாக என் வளர்ச்சிக்கு பாண்டிங், கங்குலி செய்த உதவி பற்றித் தான் தான் கூறினேன் என ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் அவர்.
டெல்லி வெற்றி
அவரது விளக்கத்தால் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. ஐபிஎல் அணிகள் அவர் வாய் தவறி பேசியதை புரிந்து கொண்டு இதை பெரிதாக்காமல் விட்டுவிட்டன. டெல்லி அணி, அடுத்ததாக சிஎஸ்கே அணியுடன் செப்டம்பர் 25 அன்று மோத உள்ளது.