2020 ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க இருந்தது. அதற்காக கடந்த டிசம்பர் மாதம் ஏலம் கூட நடந்தது. எல்லாம் சரியாக சென்ற நிலையில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, இந்தியாவிலும் அதிக அளவில் பரவத் துவங்கியது.
சிக்கல்கள்
வெளிநாட்டு வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல், ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூட முடியாத நிலை, காலி மைதானத்தில் போட்டியை நடத்தினாலும் வீரர்கள், ஊழியர்களின் உடல்நலன் மீதான பாதுகாப்பு, இந்தியாவில் விதிக்கப்பட்டு உள்ள கடும் ஊரடங்கு உத்தரவு என ஐபிஎல் தொடருக்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
கால வரையின்றி தள்ளி வைப்பு
முதலில் 2020 ஐபிஎல் தொடரை ஏப்ரல் 15 வரை தள்ளி வைத்த பிசிசிஐ, தற்போது மே 3 வரை நீட்டிக்கப்பட்டு இருக்கும் லாக்டவுனால் ஐபிஎல் தொடரை கால வரையின்றி தள்ளி வைத்துள்ளது. இனி செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்தலாமா? என யோசித்து வருகிறது.
இலங்கை அழைப்பு
இந்த நிலையில் தான் இலங்கை கிரிக்கெட் போர்டு, பிசிசிஐக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை தென்னாப்பிரிக்காவில் நடத்தியது போல, 2020 ஐபிஎல் தொடரை இலங்கையில் நடத்த அழைப்பு விடுத்துள்ளது இலங்கை கிரிக்கெட் போர்டு.
இலங்கையில் இயல்பு நிலை
இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுவது மிகவும் குறைவாக உள்ளது. அங்கே ஓரளவு இயல்பு நிலை உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் இலங்கை கிரிக்கெட் போர்டு, பிசிசிஐக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நஷ்டம்
2020 ஐபிஎல் தொடர் நடக்காமல் போனால் பல ஆயிரம் கோடி நஷ்டம் ஆகும் என கூறப்படுகிறது. அதே சமயம், ஒருவேளை இலங்கையில் ஐபிஎல் தொடரை நடத்தினால் அதனால் சில கூடுதல் செலவினங்கள் ஆகக் கூடும். ஆனால், பெரும் நஷ்டம் குறையும் அல்லது குறைந்த லாபம் கிடைக்கும்.
2009 ஐபிஎல் தொடர் போல..
இதுபற்றி பேசிய இலங்கை கிரிக்கெட் போர்டு தலைவர் ஷம்மி சில்வா, "ஐபிஎல் ரத்து செய்யப்பட்டால், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் பயனாளர்கள் சுமார் 3500 கோடிக்கும் மேல் நஷ்டம் அடைய நேரிடும். எனவே, 2009இல் தென்னாப்பிரிக்காவில் நடத்தியது போல, மற்றொரு நாட்டில் தொடரை நடத்தினால் அது அவர்களுக்கு லாபகரமாக இருக்கும்." என்றார்.
தயாராக உள்ளோம்
"இந்த அழைப்பிற்கு சம்மதம் கூறினால், இலங்கை சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் நாங்கள் அனைத்து வசதிகளையும் செய்து தர தயாராக உள்ளோம். மேலும், ஐபிஎல் இலங்கையில் நடந்தால், அதிக பணம் இலங்கை நாட்டுக்குள் வரும்" எனவும் அவர் கூறினார்.
இலங்கை நிலை என்ன?
இலங்கையில் இதுவரை 238 பேர் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்படுள்ளனர். 7 பேர் வரை இறந்துள்ளனர். அங்கே நோய் பரவும் வேகமும் மிக குறைவாக உள்ளது. அடுத்த சில நாட்களில் இலங்கை முன்னெச்சரிக்கையாக இருந்தால் முற்றிலுமாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான், இலங்கை கிரிக்கெட் போர்டு அழைப்பு விடுத்துள்ளது.
பிசிசிஐ முடிவு
பிசிசிஐ அடுத்த சில நாட்களுக்குள் தங்கள் அழைப்பு குறித்து முடிவு செய்யும் என இலங்கை கிரிக்கெட் அமைப்பு எதிர்பார்த்து வருகிறது. இலங்கையில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ சம்மதம் தெரிவித்தாலும், அதை நடத்துவதில் பல சிக்கல்கள் எழக் கூடும். இந்தியாவில் இருந்து வீரர்கள் இலங்கை செல்ல இந்திய அரசு அனுமதி அளிக்குமா? என்ற கேள்வியும் உள்ளது.