என்ன திட்டம்?
தற்போது ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்று வருகின்றன. அடுத்த சீசன் முதல் ஒன்பது அணிகளை ஆட வைக்க கங்குலி முயன்று வருகிறார். அதன் மூலம் ஐபிஎல் தொடர் இன்னும் பிரம்மாண்டமாக மாறும். முன்பு தள்ளி வைக்கப்பட்ட இந்த திட்டத்தை இப்போது கையில் எடுக்க முக்கிய காரணம் உள்ளது.
வெற்றி
2020 ஐபிஎல் தொடர் வெற்றி பெறுமா? என்ற சந்தேகத்துக்கு நடுவே துவங்கியது. தொடர் முழுவதுமாக நடைபெறுவதே கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் தடைகளை மீறி வெற்றிகரமாக நடந்த ஐபிஎல் தொடர் டிஆர்பி ரேட்டிங்கை தெறிக்கவிட்டது.
பணம் கொட்டும்
இந்த நிலையில், அடுத்த சீசனில் புதிய அணியை அறிமுகம் செய்து இன்னும் பிரம்மாண்டமாக தொடரை நடத்தி அதிக வருமானம் ஈட்ட கங்குலி திட்டமிட்டு வருகிறார். கொரோனா வைரஸால் இழந்த வருமானத்தை ஈடுகட்டவே இந்த திட்டம்.
சில சிக்கல்கள்
ஆனால், புதிய அணியை அறிமுகம் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. புதிய அணியை கொண்டு வந்தால் விளம்பரதாரர்கள், தொடரை ஒளிபரப்பும் தொலைக்காட்சியிடம் ஏற்கனவே போடப்பட்ட விளம்பர ஒப்பந்தத்தை அதிக விலைக்கு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.
ஏலம்
அதன் பின் புதிய அணிக்கு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றால், அனைத்து ஐபிஎல் அணிகளையும் புதுப்பிக்கும் வகையில் மெகா ஏலம் நடத்த வேண்டும். அதுவும் குறுகிய காலத்தில் நடத்த வேண்டும். மேலும், லீக் சுற்றில் போட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.
விவாதம்
இந்த நிலையில், மற்றொரு விவாதத்தை கிளப்பி இருக்கிறார்கள் சில பிசிசிஐ அதிகாரிகள். முன்பு இரண்டு ஐபிஎல் அணிகளை கூடுதலாக சேர்க்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதை வைத்து 2021 ஐபிஎல் தொடரில் ஒரு அணியை சேர்ப்பதா? அல்லது இரண்டு அணியை சேர்ப்பதா? என்ற விவாதம் நடந்து வருகிறது.
முட்டுக்கட்டை
சிலர் கூடுதல் அணியை சேர்க்கவே வேண்டாம் என முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சந்தை நிலையற்று இருக்கும் நிலையில், கூடுதல் அணிகளை சேர்த்து அது சிக்கலை உண்டாக்கலாம் என்கிறார்கள்.
போட்டி போடும் பெரும் புள்ளிகள்
பிசிசிஐ இன்னும் உறுதியான முடிவை எடுக்காத நிலையில் பெரும் புள்ளிகள் இப்போதே புதிய ஐபிஎல் அணியை வாங்க முட்டி மோதி வருகிறார்கள். ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரில் பார்க்க வந்த நடிகர் மோகன் லால் புதிய அணியை வாங்க இருக்கிறார் என ஒரு வதந்தி உள்ளது.
தீபாவளி முடிந்த உடன்..
அதானி குழுமம், டாட்டா குழுமம், பைஜூஸ், சஞ்சீவ் கோயங்கா குழுமம் ஆகியவை புதிய ஐபிஎல் அணியை வாங்க போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிசிசிஐ தீபாவளிக்குள் எத்தனை புதிய ஐபிஎல் அணிகள் என்பதையும், மெகா ஏலம், எத்தனை லீக் போட்டிகள் என்பதையும் திட்டமிட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் அணிகள் ஆர்வம்
இந்த திட்டத்துக்கு ஏற்கனவே உள்ள எட்டு ஐபிஎல் அணிகளும் சம்மதம் கூறி இருப்பதாகவே கூறப்படுகிறது. கூடுதல் போட்டிகளில் பங்கேற்றால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதால் மற்ற அணிகள் ஒப்புதல் கூறி உள்ளன. கங்குலிக்கு இது பெரும் சவாலான திட்டம் தான்.