சிஎஸ்கே அணி நிலை
2020 ஐபிஎல் தொடரில் முதல் போட்டியை வெற்றியுடன் துவக்கிய சிஎஸ்கே அணி, அதன் பின் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்விகளை சந்தித்தது. தான் ஆடிய முதல் ஏழு லீக் போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது.
வெற்றி அவசியம்
இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் பிளே-ஆஃப் நிறைவேற வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்தால் மட்டுமே சிஎஸ்கே அணியால் நிச்சயமாக பிளே-ஆஃப் செல்ல முடியும். அடுத்ததாக ஹைதராபாத் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்று அந்த நம்பிக்கையை பெற வேண்டும்.
மிடில் ஆர்டர் பேட்டிங்
சிஎஸ்கே அணியின் பலவீனம் பேட்டிங் தான். அதிலும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யும் வீரர்கள் நிறைய பந்துகளை வீணடித்து சேஸிங்கை கடினமானதாக மாற்றி தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்குகிறார்கள். மிடில் ஆர்டரில் மிக மோசமான பார்ம் அவுட்டில் இருந்த கேதர் ஜாதவ் நீக்கப்பட்ட போதும் அந்த அணியின் சிக்கல்கள் தீரவில்லை.
டாப் ஆர்டர்
சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டரில் ஷேன் வாட்சன், பாப் டுபிளெசிஸ், அம்பதி ராயுடு உள்ளனர். அவர்கள் சில போட்டிகளில் விரைவில் ஆட்டமிழந்தாலும், ஓரளவு ரன் குவித்துள்ளனர். அதனால், டாப் ஆர்டரை மாற்றுவதை குறித்து யாரும் சிந்திக்கவில்லை.
பிராட் ஹாக்
ஆனால், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக், சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டரில் ஒரு மாற்றம் செய்தால் மொத்த பேட்டிங் ஆர்டரும் வலுப்பெறும் என கூறி இருக்கிறார். இளம் வீரர் சாம் கர்ரன் சிறப்பாக ஆடி வரும் நிலையில் அவரை டாப் ஆர்டரில் ஆட வைக்க வேண்டும் என கூறி உள்ளார் அவர்.
அம்பதி ராயுடு வேண்டாம்
மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடி வரும் அம்பதி ராயுடுவை இடம் மாற்றி மிடில் ஆர்டரில் பேட்டிங் ஆட வைக்க வேண்டும் எனவும் பிராட் ஹாக் கூறி உள்ளார். அவருக்கு பதில் அதிரடியாக ஆடி வரும் சாம் கர்ரன் மூன்றாம் வரிசையில் இறங்குவார்.
இடது கை வீரர்
ஏன் குறிப்பாக சாம் கர்ரனை அவர் தேர்வு செய்தார்? சாம் கர்ரன் இடது கை பேட்ஸ்மேன். அவர் மூன்றாம் வரிசையில் இறங்கினால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை, இடது, வலது என மிடில் ஆர்டரில் மாறி ஆடும் வாய்ப்பு கிடைக்கும். இது எதிரணிகளை குழப்பும் உத்தி ஆகும்.
தாஹிர் ஆட வேண்டும்
சாம் கர்ரன் குறித்து பேசிய ஹாக் அடுத்து டிவைன் பிராவோவுக்கு பதில், இம்ரான் தாஹிர் சிஎஸ்கே அணியில் இடம் பெற வேண்டும் எனவும் கூறி உள்ளார். இது கடினமான முடிவாக இருக்கும் என்றாலும், இது அவசியமான முடிவு என கூறினார் ஹாக்.
இம்ரான் தாஹிர் ஏன்?
ஐபிஎல் போட்டிகள் நடந்து வரும் மூன்று மைதானங்களும் மந்தமாக மாறி உள்ளன. சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கத் துவங்கி உள்ளன. இந்த நேரத்தில் கூடுதல் சுழற் பந்துவீச்சாளர் சிஎஸ்கே அணிக்கு தேவை என கருதுகிறார் பிராட் ஹாக்.