சிஎஸ்கே பேட்டிங்
சிஎஸ்கே அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான 29வது லீக் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த சீசனில் இது தான் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்யும் போட்டி. இதில் பெரிய ஆச்சரியமாக சாம் கர்ரன் துவக்க வீரராக களமிறங்கினார்.
டுபிளெசிஸ் டக் அவுட்
சாம் கர்ரன் முதல் இரண்டு ஓவர்களின் 12 பந்துகளையும் சந்தித்து இருந்தார். மூன்றாவது ஓவரின் முதல் பந்தை சந்தித்த டுபிளெசிஸ் பந்தை கணிக்க முடியாமல் ஆடி டக் அவுட் ஆனார். அடுத்து வாட்சன் பேட்டிங் செய்ய வந்தார்.
4வது ஓவர்
அதிரடி ஆட்டம் ஆட துவக்க வீரராக இறங்கி இருந்த கர்ரன் நான்காவது ஓவரில் 2 சிக்ஸ், 2 ஃபோர் அடித்து மிரட்டினார். அவர் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தன் வேலையை சரியாக செய்து அவர் வெளியேறினார்.
வாட்சன் - ராயுடு
அடுத்து அம்பதி ராயுடு களமிறங்கினார். வாட்சனுடன் இணைந்து அவர் நிதான ஆட்டம் ஆடினார். இருவரும் பந்துவீச்சாளர்களை பார்த்து, பார்த்து ஆடினர். 15வது ஓவர் வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ராயுடு 41, வாட்சன் 42 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
தோனி - ஜடேஜா
அடுத்து தோனி, ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். தோனி 2 ஃபோர், 1 சிக்ஸ் அடித்து 13 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த பிராவோ தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
கடைசி ஓவர்
கடைசி ஓவரில் ஜடேஜா ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே அணி 15 ரன்கள் சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. துபாய் ஆடுகளத்தில் 160 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி வாய்ப்பு இருக்கும் நிலையில், சிஎஸ்கே அதை அடைந்தது.
திட்டம் வெற்றி
கடந்த போட்டிகளில் சிஎஸ்கே அணி பேட்டிங்கில் தடுமாறி வந்த நிலையில் இந்தப் போட்டியில் தோனி சொல்லி அடித்துள்ளார். சரியாக திட்டமிட்டு கடைசி ஐந்து ஓவர்களில் தோனி - ஜடேஜா ஜோடி அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவித்தது. இது தான் பெரிய ஸ்கோர் எடுக்க முக்கிய காரணமாக அமைந்தது.