டாஸ் முடிவு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் லீக் சுற்றின் 35வது போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
அதிர்ச்சி
வார்னர் எடுத்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. காரணம், 2020 ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடந்து வரும் நிலையில், அங்குள்ள ஆடுகளங்களில் முதலில் பந்துவீசும் அணி பெரும்பாலும் தோல்வி அடைந்து வருகின்றன.
இரண்டு அணிகள் மட்டுமே
முதல் போட்டியில் சிஎஸ்கே அணி, மும்பை அணிக்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து வெற்றி பெற்று இருந்தது. 9வது போட்டியில் ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்து வெற்றி பெற்று இருந்தது. அந்த இரண்டு அணிகளை தாண்டி எந்த அணியும் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து வெற்றி பெறவில்லை.
ஏன் இந்த முடிவு?
இந்த நிலையில், டேவிட் வார்னர் டாஸ் வென்றும் பந்துவீச்சை தேர்வு செய்ய என்ன காரணம்? அணியில் அதிக பேட்ஸ்மேன்களை அவர் தேர்வு செய்ததே காரணம் என கூறப்படுகிறது. 5 முழு நேர பேட்ஸ்மேன்களும், 3 ஆல் - ர்வுண்டர்களும் அணியில் இருப்பதால் அவர் பேட்டிங் மீது நம்பிக்கை வைத்து சேஸிங் செய்ய முடிவு செய்தார்.
இளம் வீரர்கள்
அணியில் கலீல் அஹ்மது, ஷாபாஸ் நதீம்-ஐ நீக்கி விட்டு, இளம் வீரர்கள் அப்துல் சமத், பேசில் தம்பியை அணியில் சேர்த்தார் வார்னர். இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அதிரடி முடிவை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா நிலை
கொல்கத்தா அணியில் சுனில் நரைன் பந்து வீச அனுமதி கிடைத்தாலும் அவரை தேர்வு செய்யவில்லை அந்த அணி. குல்தீப் யாதவ், லாக்கி பெர்குசன் அணியில் தேர்வு செய்யப்பட்டனர். கிறிஸ் க்ரீன், பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டனர்.
கொல்கத்தா அணி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி - ராகுல் திரிபாதி, ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், இயான் மார்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, குல்தீப் யாதவ், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி
ஹைதராபாத் அணி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி - டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், ப்ரியம் கார்க், விஜய் ஷங்கர், அப்துல் சமத், ரஷித் கான், சந்தீப் சர்மா, நடராஜன், பேசில் தம்பி