சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2020 ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்கியது. இந்த அணியில் ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன் என உலகின் முன்னணி பேட்ஸ்மேன்கள் இடம் பெற்று இருந்ததால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
தோல்விகள்
ஆனால், அந்த அணி ஐந்து போட்டிகளில் மூன்று தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் உள்ளது. புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. அந்த அணியில் மூத்த வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயத்தால் தொடரில் இருந்தே விலகி உள்ளார்.
இளம் வீரர்கள்
இந்த நிலையில் டேவிட் வார்னர் இளம் வீரர்களை வைத்தே ஹைதராபாத் அணியை வழிநடத்தி வருகிறார். இளம் வீரர்கள் அனைவரும் அந்த அணியில் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். இளம் வீரர்களை நம்பி மிடில் ஆர்டரை ஒப்படைத்துள்ள வார்னர், விஜய் ஷங்கரை நம்பவில்லை.
விஜய் ஷங்கர்
விஜய் ஷங்கர் கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய ஆல் - ரவுண்டராக இருந்தார். ஆனால், அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அதையும் மீறி ஆல் - ரவுண்டர் என்ற அடிப்படையில் அவருக்கு நீண்ட வாய்ப்பு கிடைத்தது.
டக் அவுட்
2020 ஐபிஎல் தொடரிலும் ஹைதராபாத் அணியின் முதல் போட்டியில் இடம் பெற்றார் விஜய் ஷங்கர். அந்தப் போட்டியில் 1.2 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்து 14 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். பேட்டிங்கில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி இருந்தார்.
அப்துல் சமத்
இந்த நிலையில், அவரை நீக்கி விட்டு அப்துல் சமத் எனும் அதிக அனுபவம் இல்லாத காஷ்மீர் வீரரை ஆல் - ரவுண்டராக தேர்வு செய்தார் வார்னர். சமத் அதிரடியாகவும் பேட்டிங் ஆடக் கூடியவர். அவர் சிறப்பாக ஆடி வருவதால் தொடர்ந்து அணியில் இடம் பெற்று வருகிறார்.
வாய்ப்பு இல்லை
இளம் வீரரான அப்துல் சமத்தை நம்பும் வார்னர், சர்வதேச அனுபவம் கொண்ட விஜய் ஷங்கரை நம்பவில்லை. ஏற்கனவே, விஜய் ஷங்கர் இந்திய அணியிலும் இடம் பெற்று பின் அந்த வாய்ப்பை இழந்தார். அவர் நிலையாக ஆடுவதில்லை என்பதே அவருக்கு வாய்ப்புகள் பறிபோக முக்கிய காரணம்.