மூன்றாவது போட்டி
2020 ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. ஹைதராபாத் அணிக்கு மீண்டும் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கபட்டார்.
வார்னர் எடுத்த முடிவு
ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மற்ற அணிகள் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்குமாறு பார்த்துக் கொண்டு வரும் நிலையில் வார்னர் வித்தியாசமாக அணியில் அதிக மித வேகப் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இருந்தார்.
அதிரடி பேட்டிங்
ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அதில் ஒருவர். பெங்களூர் அணி பேட்டிங்கில் அதிரடி காட்டியது. தேவ்தத் படிக்கல் - ஆரோன் பின்ச் துவக்கம் அளித்து ஆடினர். அவர்கள் அதிரடியாக ரன் சேர்த்ததால் அவர்களை பிரிக்க முயன்றார் கேப்டன் வார்னர்.
டைவ் அடித்தார்
ஐந்தாவது ஓவரை மிட்செல் மார்ஷ் வசம் அளித்தார் வார்னர். மார்ஷ் இரண்டாவது பந்தை வீசி முடித்த பின் பந்தை பிடிக்க டைவ் அடித்தார். அப்போது அவர் சறுக்கினார். வலது கணுக்காலில் உள்காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார் அவர்.
பந்து வீச முடியவில்லை
அதன் பின் இரண்டு பந்துகள் வீசிய நிலையில் அவரால் மேலும் பந்து வீச முடியவில்லை. அவர் களத்தை விட்டு வெளியேறினார். அதனால் ரசிகர்கள் அதிர்ந்தனர். அவர் ஆல் - ரவுண்டர் என்பதால் பேட்டிங்கில் ஹைதராபாத் பலத்தை இழக்கும் எனவும் ரசிகர்கள் கவலைப்பட்டனர்.
அஸ்வின் காயம்
அதன் பின் விஜய் ஷங்கர் அவரது ஓவரை வீசி முடித்தார். இதே துபாய் மைதானத்தில் இந்தப் போட்டிக்கு முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் இதே போல பீல்டிங் செய்ய டைவ் அடித்த அஸ்வின் கீழே சறுக்கி காயம் அடைந்தார்.
அவுட் பீல்டு அமைப்பு
துபாய் மைதானத்தின் அவுட் பீல்டு அமைப்பு டைவ் அடித்து அல்லது சறுக்கி பீல்டிங் செய்ய உதவவில்லை. அப்படி செய்யும் வீரர்கள் தடுமாறி காயம் அடைகிறார்கள் என ஒரு தகவல் கூறப்படுகிறது. துபாயில் தான் பெரும்பாலான ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டிங் செய்ய முடியும்
மிட்செல் மார்ஷ் காயமடைந்து பந்து வீசாத போதும் அவரால் பேட்டிங் செய்ய முடியும் என கூறி ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார் ஹைதராபாத் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லக்ஷ்மன். இந்தப் போட்டியில் பெங்களூர் அணி பேட்டிங்கில் அதிரடி காட்டியது.