மூன்றாவது போட்டி
2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் சுற்றின் மூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டேவிட் வார்னர் மீண்டும் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் அந்த அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
ஹைதராபாத் அணி
ஹைதராபாத் அணியில் சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. விஜய் ஷங்கர், டி நடராஜன் என இரண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. சித்தார்த் கௌலுக்கு பதிலாக இடது கை வேகப் பந்துவீச்சாளரான நடராஜன் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
யார் இந்த நடராஜன்?
நடராஜன் சேலத்தை சேர்ந்த இளைஞர் ஆவார். திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த அவர் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் வந்து, அங்கே இருந்து ஐபிஎல் தொடருக்குள்ளும் காலடி எடுத்து வைத்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
டென்னிஸ் பால் கிரிக்கெட்
சேலத்தில் டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆடி வந்தார் நடராஜன். அவரது பந்துவீச்சு துல்லியமாக இருப்பதை பார்த்த ஜெயப்ரகாஷ் என்ற டிவிஷன் கிரிக்கெட் வீரர், அவரை சென்னைக்கு அழைத்து வந்தார். அங்கே போராடி தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் நுழைந்தார்.
கூலியாக மாற வேண்டியவர்
அங்கே இருந்து டிஎன்பிஎல் தொடரில் ஆடி 2017இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 3 கோடிக்கு வாங்கப்பட்டார். கிரிக்கெட் மட்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்காமல் போயிருந்தால் அவர் இந்நேரம் கூலியாக வேலை செய்து கொண்டிருப்பார்.
ஐபிஎல் ஏமாற்றம்
ஐபிஎல் அவருக்கு பணத்தை கொடுத்தாலும் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. 2017இல் பஞ்சாப் அணிக்கு 6 போட்டிகள் ஆடி 2 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார். 2018இல் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் வாய்ப்பு இன்றி பெஞ்சில் அமர்ந்து வாட்டர் பாய் வேலை பார்த்து வந்தார்.
வார்னர் தந்த வாய்ப்பு
அவருக்கு 2020 ஐபிஎல் தொடரில் தங்கள் அணியின் முதல் போட்டியிலேயே வாய்ப்பு அளித்து இருக்கிறார் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர். முதல் போட்டியிலேயே அவர் தன் முத்திரையை பதித்தால் இந்த சீசன் முழுவதும் அவருக்கு ஆட வாய்ப்பு கிடைக்கக் கூடும்.
என்ன சிறப்பு?
நடராஜனின் சிறப்பு யார்க்கர் மற்றும் கட்டர் வகை பந்துவீச்சு தான். அவர் இடது கை வேகப் பந்துவீச்சாளர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அளித்துள்ளார் வார்னர். அவர் மத்திய ஓவர்களில் பந்து வீச வாய்ப்பு அளிக்க திட்டமிட்டு அவரை தேர்வு செய்துள்ளார்.
ஹைதராபாத் வேகப் பந்துவீச்சு
ஹைதராபாத் அணி ஐந்து வேகப் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மிட்செல் மார்ஷ், புவனேஸ்வர் குமார், சந்தீப் சர்மா, விஜய் ஷங்கர் மற்றும் நடராஜன் என ஐந்து வேகப் பந்துவீச்சாளர்களை வைத்து அணித் தேர்வில் அதிரடி காட்டி உள்ளார்.