சிஎஸ்கே அணி
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடருக்கு தயாரான போதே சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தொடரில் இருந்து விலகி அதிர்ச்சி அளித்தனர். முக்கிய வீரர்கள் இல்லாமல் சிஎஸ்கே அணியால் வெல்ல முடியுமா? என்ற கேள்வி அப்போது எழுந்தது. எனினும், கேப்டன் தோனி இருப்பதால் சிஎஸ்கே வெற்றி நடை போடும் என அனைவரும் நம்பினர்.
2020 ஐபிஎல் செயல்பாடு
ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 10 லீக் போட்டிகளில் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று, ஏழு தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பும் சந்தேகமாக மாறி உள்ளது.
கடும் விமர்சனம்
சிஎஸ்கே அணி போட்டிகளை அணுகிய விதம், சேஸிங் செய்த விதம் என பல தவறுகளை சுட்டிக் காட்டி ரசிகர்கள் விளாசி வருகின்றனர். தோனியின் அணித் தேர்வும் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் விமர்சனத்தை சந்தித்தது.
என்ன காரணம்?
பலரும் பல்வேறு காரணங்களை பற்றி பேசி வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் அடிப்படை பிரச்சனைதான் இதற்கு காரணம் என உண்மையை போட்டு உடைத்துள்ளார் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங். வயதான அணி தான் காரணம் என கூறி உள்ளார்.
2018 ஐபிஎல்
2018 ஐபிஎல் தொடரில் தடையில் இருந்து மீண்டு வந்த சிஎஸ்கே அணி தங்கள் அணியில் முன்பு ஆடிய அதே பழைய வீரர்களை தேர்வு செய்தது. அவர்கள் அனைவருக்கும் வயதாகி விட்டது என்பதை பொருட்படுத்தவில்லை. வயதான அணியாக இருந்தாலும் 2018 ஐபிஎல் தொடரை கைப்பற்றியது சிஎஸ்கே அணி.
நிலைகுலைந்த சிஎஸ்கே
2019 ஐபிஎல் தொடரில் சறுக்கல்கள் இருந்தாலும் இறுதிப் போட்டி வரை முன்னேறியது சிஎஸ்கே. இறுதிப் போட்டியில் ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது. அடுத்து 2020 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றிலேயே மொத்தமாக சறுக்கி நிலைகுலைந்து போயுள்ளது.
உண்மையை சொன்ன பிளெம்மிங்
பிளெம்மிங் இது பற்றி கூறுகையில், தற்போது இந்த அணியை பார்த்தால் சோர்ந்து போய் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது என கூறலாம். இந்த மூன்று ஆண்டுகளை பார்த்தால் முதல் ஆண்டு வெற்றி பெற்றோம், இரண்டாம் ஆண்டு கடைசி பந்தில் தோல்வி அடைந்தோம் என்றார்.
எப்படியும் வயதான இந்த அணியை வைத்துக் கொண்டு மூன்றாம் ஆண்டு கஷ்டப்படுவோம் என தெரியும். மேலும், துபாய் எங்கள் அணியிடம் இருந்து பல புதிய விஷயங்களை கேட்கிறது என தோல்விக்கான காரணம் வயதான அணி தான் என போட்டு உடைத்துள்ளார்.
டிரஸ்ஸிங் அறை
மேலும், டிரஸ்ஸிங் அறையின் மனநிலை உறுதியாக இல்லை என்றார். சில போட்டிகளில் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்தோம். பிளே-ஆஃப் செல்ல சிறிய வாய்ப்பு உள்ளது. ஆனாலும், மற்ற அணிகளின் முடிவை எதிர்நோக்க வேண்டும் என்றார் பிளெம்மிங்.
பிளே-ஆஃப் வாய்ப்பு
சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என்றால் இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும். மேலும், மற்ற அணிகள் பெறும் வெற்றி - தோல்விகளை பொறுத்தே சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்ல முடியும். அதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது.
இனி என்ன?
சிஎஸ்கே அணி இன்னும் நான்கு லீக் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. சிஎஸ்கே அணியின் 10 சீசன் வெற்றி நடை முடிவுக்கு வந்துள்ளது.