ஐபிஎல் தொடர்
2020 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக பங்கேற்று தீவிரமாக கிரிக்கெட் ஆடி வருகிறார் ஸ்டீவ் ஸ்மித். அவர் முன்னதாக ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் தொடரில் ஆடி விட்டு, அங்கிருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகம் வந்து ஐபிஎல் தொடரில் ஆடி வருகிறார்.
பாதுகாப்பு வளையம்
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க ஜூலை மாதம் முதலே பாதுகாப்பு வளையத்தில் இருந்து வருகின்றனர்.
பிரிவு
அவர்கள் ஐபிஎல் தொடரில் ஆடி முடிக்கும் போது தங்கள் குடும்பத்தை பிரிந்து சுமார் ஐந்து மாதம் ஆகி இருக்கும். அதன் பின் பிக் பாஷ் லீக் தொடரில் ஆட வேண்டும் என்றால் மீண்டும் பாதுகாப்பு வளையத்தை தொடர வேண்டும். மனதளவில் அது சோர்வை அளிக்கும்.
புறக்கணிப்பு
அதனால், ஸ்டீவ் ஸ்மித் உட்பட ஐபிஎல் தொடரில் ஆடி வரும் ஆஸ்திரேலிய வீரர்கள் பிக் பாஷ் லீக் தொடரை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். டேவிட் வார்னர், பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதே முடிவை எடுத்துள்ளனர்.
உண்மையை சொல்லி விடுகிறேன்
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஸ்டீவ் ஸ்மித், உங்களிடம் உண்மையை சொல்லி விடுகிறேன். சுத்தமாக பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்க வாய்ப்பே இல்லை என்றார். அவரது பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிலை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் சுமார் எட்டு மாதமாக சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்த முடியாமல் காத்துக் கொண்டு உள்ளது. இந்திய அணி நவம்பர் இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது தான் கடந்த எட்டு மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர்.
நடக்காது
அந்த தொடருடன் பிக் பாஷ் லீக் தொடரை நடத்த உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட். இந்திய கிரிக்கெட் தொடர் துவங்கும் முன் ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள் பிக் பாஷ் லீக் தொடரில் ஆடுவார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் எதிர்பார்த்தது. ஆனால், அது இப்போது நடக்காது என தெரிய வந்துள்ளது.