சிஎஸ்கே வீரர்கள்
ஐபிஎல் அணிகளிலேயே வித்தியாசமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே. அந்த அணியில் மட்டுமே துவக்கத்தில் இருந்தே ஆடும் வீரர்கள் அதிகம். சுமார் 4, 5 சீசன்களுக்கு மேலாக அந்த அணியில் தொடர்ந்து ஆடி வரும் வீரர்கள் எண்ணிக்கையும் அதிகம்.
எந்த சச்சரவும் இல்லாத அணி
வீரர்கள் - அணி நிர்வாகம் இடையே ஆன உறவு மிக இனிமையானதாக இருந்து வந்தது. கடந்த ஆண்டு வரை சிஎஸ்கே வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக யாரும் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் நிலைமை மாறியது.
சுரேஷ் ரெய்னா விவகாரம்
தொடர் துவங்கும் முன் துபாயில் சிஎஸ்கே அணி குவாரன்டைன் செய்யப்பட்டு இருந்த போது சுரேஷ் ரெய்னா திடீரென 2020 ஐபிஎல் தொடரை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியானது. குவாரன்டைன் விதிகளை மீறியது தொடர்பாக அவருக்கும், அணி நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தோனி எடுத்த முடிவு
அப்போது கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னாவை தக்க வைக்கும் முயற்சிகளை விடுத்தது, ரெய்னா இந்தியாவுக்கு போவதாக இருந்தால் போகட்டும் என அதிரடி முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தோனி - சுரேஷ் ரெய்னா இடையே விரிசல் ஏற்பட்டதாகவும் கூட கூறப்படுகிறது.
சீனிவாசன் பேட்டி
அப்போது வெளி உலகுக்கு என்ன நடந்தது என தெரியாத நிலையில், சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், சுரேஷ் ரெய்னாவை கடுமையாக தாக்கிப் பேசினார். ரெய்னா எவ்வளவு பணத்தை இழக்கப் போகிறார் என்பதை விரைவில் உணர்வார் என கூறி இருந்தார்.
பணத்திற்கு ஆடுபவர்கள்
ஐபிஎல் அணி வீரர்கள் பணத்திற்கு ஆடுபவர்கள் என்பது போல அவர் பேசி இருந்தது கடும் அதிர்ச்சி அளித்தது. மேலும், அவர் ரெய்னா தலைக்கனம் பிடித்து நடந்து கொள்கிறார் எனவும் குறிப்பிட்டு பேசி இருந்தார். சிஎஸ்கே அணியில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ரெய்னா விருப்பம் புறக்கணிப்பு
அதன் பின் ரெய்னா அளித்த பேட்டிகளில் தான் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய உள்ளதாகவும், அது பற்றி பேசி இருப்பதாகவும் கூறி வந்தார். ஆனால், சிஎஸ்கே அணியில் இருந்து அவருக்கு மீண்டும் அழைப்பு வரவில்லை.
சிஎஸ்கே வீரர்கள் மனநிலை
ரெய்னா விவகாரம் சிஎஸ்கே வீரர்கள் மனதை பாதித்து இருக்கும் என அப்போதே விமர்சகர்கள் கூறினர், ஆனால், அதன் வீரியம் குறித்து அப்போது யாருக்கும் தெரியவில்லை. லீக் சுற்றில் சிஎஸ்கே அணி சேஸிங் செய்யக் கூட சரியான திட்டம் இல்லாமல் ஆடுவதை பார்க்கும் போது தான் சிஎஸ்கே அணி நிலைகுலைந்து போயிருப்பது தெரிகிறது.
சிஎஸ்கே தோல்விகள்
தற்போது ஒவ்வொரு தோல்விக்கு பின்னும் சிஎஸ்கே அணியின் வீரர்கள் குறித்து கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெம்மிங் தனித்தனியாக அளித்து வரும் பேட்டிகள் பல விஷயத்தை கூறுகின்றன. நிச்சயம் சிஎஸ்கே வீரர்கள் நல்ல மனநிலையில் இல்லை என்பதையே அவர்கள் வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன.
இது தான் காரணமா?
சிஎஸ்கே அணி வீரர்கள் மனதளவில் உடைந்து போக சுரேஷ் ரெய்னா விவகாரம் தான் காரணமா? அதுமட்டும் இல்லை. தோல்விக்கு இவர்தான் காரணம் என தெரிந்த போதும் ஜாதவ்வை தொடர்ந்து அணியில் தக்க வைத்தது, இளம் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்காதது, சேஸிங்கில் மொத்த அணியும் திட்டமே இல்லாமல் தோனி போலவே ஆட முயன்றது என பல காரணங்கள் உள்ளன. ஆனால், எல்லா குழப்பங்களுக்கும் ஆரம்பம் ரெய்னா விவகாரம் தான்.