சிஎஸ்கே நிலை
2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பையும் இழந்துள்ளது. சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா இல்லாததே பேட்டிங் பலவீனமடைய முக்கிய காரணம் என ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை கூறி உள்ளனர்.
ரெய்னா விலகல்
2020 ஐபிஎல் தொடருக்கு முன் அன்யோ நிர்வாகத்துடனும், தோனி உடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரெய்னா விலகியதாக அப்போது கூறப்பட்டது. அவர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம் தான் முதலில் கூறியது.
வாய்ப்பு மறுப்பு
சுரேஷ் ரெய்னா விலகியதாக எதுவும் கூறாத நிலையில், அவர் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைய விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால், அவருக்கு கடைசி வரை அழைப்பு வரவில்லை. தோனி தான் அவரை சேர்ப்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் கூறியது. தோனி அவரை அணியில் சேர்க்கவில்லை.
நம்ப முடியவில்லை
சிஎஸ்கே அணியின் முதல் போட்டிக்கு முன்னதாக ட்வீட் வெளியிட்ட ரெய்னா தான் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை. ஆனாலும், சிஎஸ்கே அணி வெற்றி பெற வாழ்த்துவதாக அவர் கூறி இருந்தார்.
தொடர்ந்து ஆதரவு
அதன் பின், சுரேஷ் ரெய்னா அவ்வப்போது சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக பதிவுகளை பகிர்ந்து வந்தார். மும்பை போட்டியில் சிஎஸ்கே அணி விக்கெட்களை இழந்து தவித்த போது சாம் கர்ரன் அரைசதம் அடித்து அணியை 100 ரன்களுக்கு மேல் எடுக்கச் செய்தார். அப்போது சாம் கர்ரனை பாராட்டி பதிவிட்டார் ரெய்னா.
ஹர்பஜன் சிங் என்ன செய்தார்?
ரெய்னாவுடன் 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்காத மற்றொரு வீரரான ஹர்பஜன் சிங் சில முறை தோனி மற்றும் சிஎஸ்கே தோல்வி அடைந்த போது கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தார். தாமாக விலகிய வீரரே அணியை கிண்டல் செய்த போதும், வெளியேற்றப்பட்ட ரெய்னா தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.
மீண்டும் வர விருப்பமா?
சுரேஷ் ரெய்னா நிச்சயம் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்கே மீண்டும் திரும்ப விரும்புகிறார் என்பதையே இது காட்டுவதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் அணியை மாற்றி அமைக்க உள்ளது. அப்போது சுரேஷ் ரெய்னா அணியில் மீண்டும் வாய்ப்பு பெறக் கூடும்.
அனுபவ வீரர்
சுரேஷ் ரெய்னா சாதாரண டி20 வீரர் அல்ல. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர். அதிக சிக்ஸ், அதிக அரைசதம் என பல்வேறு சாதனைப் பட்டியல்களில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. அவரது ஐபிஎல் அனுபவம் நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு முக்கியமான ஒன்றாகும்.
தோனி இருப்பார்
2021 ஐபிஎல் தொடரில் நிச்சயம் தோனி பங்கேற்க உள்ளார். அவர் வீரராக சிஎஸ்கே அணியில் இடம் பெறுவாரா? அல்லது ஆலோசகராக இடம் பெறுவாரா? என்பது மட்டுமே கேள்விக் குறியாக உள்ளது. தோனி ரெய்னாவை அணியில் சேர்க்க சம்மதம் தெரிவிப்பாரா?