சிஎஸ்கே - ரெய்னா மோதல்
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் சென்ற நிலையில் அங்கே சுரேஷ் ரெய்னா கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. அது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் கேட்ட போது ரெய்னா கோபம் கொண்டதாக கூறப்படுகிறது.
ரெய்னா விலகல்
இதையடுத்து சுரேஷ் ரெய்னா கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்தியா திரும்பினார். அவர் 2020 ஐபிஎல் தொடரில் இருந்தே விலகியதாக சிஎஸ்கே நிர்வாகம்அப்போது அறிவித்தது. ரெய்னா தான் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கவில்லை.
தோனி பிடிவாதம்
மாறாக ரெய்னா தான் மீண்டும் சிஎஸ்கே அணியில் விரைவில் சேர்ந்து ஐபிஎல் போட்டிகளில் ஆடுவேன் என்று பேட்டிகளில் குறிப்பிட்டார். அவரது வருகை குறித்து கேப்டன் தோனி முடிவு செய்வார் என கூறப்பட்டது. தோனி கடைசி வரை ரெய்னாவை அணியில் தேர்வு செய்யவில்லை.
தோல்விகள்
ஐபிஎல் லீக் சுற்றில் ஆடத் துவங்கிய சிஎஸ்கே அணி முதல் போட்டியில் வென்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் சேஸிங் செய்யத் தெரியாத கத்துக்குட்டி அணி போல ஆடி தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
ரசிகர்கள் கோரிக்கை
இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்கள் சுரேஷ் ரெய்னாவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது இணையம் முழுவதும் டிரென்டிங் ஆனது. சிஎஸ்கே நிர்வாகத்துக்கு இதனால் தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.
சிஎஸ்கே விளக்கம்
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் சேர வாய்ப்பே இல்லை என நிர்வாகம் விளக்கம் அளித்தது. அப்போதும் கூட ரசிகர்கள் அடங்கவில்லை. தொடர்ந்து ரெய்னாவை சிஎஸ்கே அணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
பெயர் நீக்கம்
இந்த நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் அவரது பெயரை அணியின் இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளது. அவர் தொடரில் இருந்து விலகிய போதும், இத்தனை நாள் அவர் பெயர் இடம் பெற்று இருந்தது. தற்போது ரசிகர்கள் அவரை மீண்டும் அழைத்து வரும் நிலையில், அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பெயரை நீக்கி உள்ளனர்.
நம்பிக்கை இழந்த ரசிகர்கள்
சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரது பெயர்களும் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருவருமே தொடரில் இருந்து விலகி உள்ளனர். சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து வரும் நிலையில், ரெய்னா விஷயத்தில் பிடிவாதமாக இருப்பதால் ரசிகர்கள் அந்த அணி மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
வெற்றிகள்
அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே அணி ரசிகர்களின் ஆதரவை தொடர்ந்து தக்க வைக்க முடியும். அடுத்த போட்டிகளில் அம்பதி காயத்தில் இருந்த ராயுடு, டிவைன் பிராவோ ஆட உள்ளதாக கூறப்படுகிறது.