தோனி மவுனம்
தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் பங்கேற்கவில்லை. அவர் அப்போதே ஓய்வு முடிவை அறிவிப்பார் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அப்படி எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை. தோனி அப்போது முதல் இந்திய அணியில் மீண்டும் ஆடுவது குறித்து மவுனமாகவே இருக்கிறார்.
வீரர்கள் ஒப்பந்தம்
இந்த நிலையில், பிசிசிஐ-யின் புதிய வீரர்கள் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இருந்து தோனி பெயர் அதிரடியாக நீக்கப்பட்டது. அவர் கடந்த ஆறு மாதங்களாக இந்திய அணியிலும், வேறு எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காததால் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது.
ரசிகர்கள் அதிர்ச்சி
இதை எதிர்பாராத தோனி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தோனிக்கு ஒப்பந்தம் அளிக்காததால் அவர் விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என சில தகவல்கள் வெளியாகின. சிலர் அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினால், இந்திய அணியில் இடம் பெறுவார் என கூறினர்.
பயிற்சி செய்த தோனி
பிசிசிஐ அறிவித்த ஒப்பந்தத்தில் தன் பெயர் நீக்கப்பட்ட அதே நாளில் தோனி ஐபிஎல் தொடருக்காக தன் பயிற்சியை துவக்கினார். ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் மைதானத்தில் அவர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். அதன் மூலம், தோனி ஓய்வு அறிவிக்கப் போவதில்லை என்பது தெளிவானது.
ஐபிஎல்-க்குப் பின் முடிவு
ஐபிஎல் தொடருக்கு பின்னரே தோனி இந்திய அணியில் மீண்டும் ஆடுவது குறித்து தெரிய வரும் என இந்திய அணி நிர்வாகம் கூறி வந்தது. எனவே, 2020 ஐபிஎல் தொடரை தோனி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அவர் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்தது.
சிஎஸ்கே பயிற்சி
இதன் இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மார்ச் மாத இறுதியில் துவங்க உள்ள ஐபிஎல் தொடருக்கான பயற்சியை துவக்கியது. அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தான், ரெய்னா தோனியின் அடுத்த திட்டம் பற்றி கூறி உள்ளார்.
ரெய்னா தகவல்
தோனி வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னை வர உள்ளதாகவும், சக வீரர்களுடன் இணைந்து அவர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டது. கடந்த சீசனில் தோனி, ரெய்னா பயிற்சி செய்வதை பார்க்கவே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்த நிலையில், இந்த அறிவிப்பு தோனி ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.
தோனி நினைத்தால்...
மேலும் ரெய்னா கூறுகையில், "தோனி இந்த விளையாட்டை விட்டு போக நினைத்தால், எந்த சத்தமும் இன்றி அவர் சென்று விடுவார்" என்றார். தோனி ஓய்வு பற்றி வரும் வதந்திகள் மற்றும் செய்திகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இதை கூறி இருக்கிறார்.
மீண்டும் இந்திய அணியில்…
மேலும், இந்திய அணியில் இடம் பெறுவது பற்றி பேசிய அவர், "அவர் தொடர்ந்து ஆட வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர் இன்னும் உடற்தகுதியோடு இருக்கிறார். தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்." என்று தோனியின் தயார்நிலை குறித்து கூறினார்.
விராட் கையில் முடிவு
அடுத்து, "அவர் இன்னமும் தேவை என்றே நான் கருதுகிறேன். ஆனால், அடுத்தகட்டம் பற்றி விராட் தான் முடிவு எடுக்க வேண்டும்" என்றார் சுரேஷ் ரெய்னா. 2020 ஐபிஎல் தொடர் தோனியின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளுக்கும், மர்மத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்குமா?