யார்க்கர் மன்னன்
ஐபிஎல் தொடர் மூலம் யார்க்கர் மன்னன் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார் வேகப் பந்துவீச்சாளர் நடராஜன். தொடர்ந்து யார்க்கர் பந்துகளை வீசி அனுபவ வீரர்களைக் கூட திணற வைத்தார் நடராஜன். அவரது பந்துவீச்சு வெளிநாட்டு வீரர்கள் மத்தியிலும் பேசப்பட்டது.
முக்கிய வீரர்
சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயம் அடைந்து விலகிய நிலையில் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக மாறினார் நடராஜன். பல போட்டிகளில் அணியின் வெற்றியில் பங்கு வகித்தார்.
ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்
எலிமினேட்டர் போட்டியில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 18வது ஓவரில் வாஷிங்க்டன் சுந்தர், ஏபி டிவில்லியர்ஸ் என இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். டிவில்லியர்ஸ் விக்கெட்டால் பெங்களூர் அணி கடைசி இரு ஓவர்களில் பெரிய அளவில் ரன் குவிக்கும் வாய்ப்பை இழந்தது.
மகிழ்ச்சி
நடராஜன் அணிக்கு முக்கிய திருப்பம் பெற்றுத் தந்ததோடு, உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவரான ஏபி டிவில்லியர்ஸ்-ஐ பவுல்டு அவுட் முறையில் வீழ்த்தி மகிழ்ச்சியில் திளைத்தார். இது பல பந்துவீச்சாளர்களின் கனவு விக்கெட்,
பெண் குழந்தை
அதே நாளில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தந்தையான அதே தினத்தில் பந்துவீச்சிலும் அசத்திய நடராஜன் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தார். வார்னர் அந்தப் போட்டியின் வெற்றிக்கு பின் அவரை வாழ்த்திப் பேசினார்.
குவியும் வாழ்த்து
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடராஜனையும், அவரது மனைவி பவித்ராவையும் வாழ்த்தி பதிவிட்டு இருந்தது. அவருக்கு தொடர்ந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடராஜன் அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணியுடன் கூடுதல் பந்துவீச்சாளராக பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.