தினேஷ் கார்த்திக்
இந்த ஐபிஎல் தொடரில் அதிகம் கவனிக்கப்பட்ட வீரர் என்றால் அது தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்தான். கொல்கத்தா கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக் இந்த முறை சிறப்பாக பேட்டிங் செய்வார், அதேபோல் நன்றாக கேப்டன்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஐபிஎல் போட்டிகள் போலவே இந்த முறையும் தினேஷ் கார்த்திக் சொதப்ப தொடங்கி உள்ளார்.
சொதப்பல் ஆட்டம்
பேட்டிங்கிலும், கேப்டன்சியிலும் சரி தினேஷ் கார்த்திக் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தினேஷ் கார்த்திக்கும் இரண்டு வருடமாக சரியாக கேப்டன்சி செய்யவில்லை. கடந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சி பெரிய அளவில் கேள்விகளை எழுப்பியது. அவரின் அணி தேர்வும் சரியாக இல்லை. இந்த முறையும் அவர் மோசமாக சொதப்புவது அதிர்ச்சி அளிக்க தொடங்கி உள்ளது.
அஸ்வின் எப்படி
அதேபோல் இன்னொரு முக்கிய வீரர் அஸ்வின் தனது கேப்டன்சியை இந்த தொடரில் இழந்துள்ளார். பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தவர் தற்போது டெல்லி அணிக்கு சாதாரண பவுலராக சென்று இருக்கிறார். ஆனால் இவர் தனது முதல் போட்டியிலேயே கையில் காயம் அடைந்து வெளியேறி உள்ளார். இன்னும் சில போட்டிகள் இவர் விளையாட வாய்ப்பில்லை.
பார்ம் பாதிப்பு
இதனால் இவரின் பார்ம் மோசமாக பாதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். இன்னும் இவர் முழுமையாக பார்மிற்கு திரும்பி விட்டாரா, லெக் ஸ்பின், ஆப் ஸ்பின் என்று மாற்றி மாற்றி போட்டவர் முழுமையாக பவுலிங்கில் செட் ஆகிவிட்டாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. எப்போதும் ஐபிஎல்லில் நன்றாக பவுலிங் செய்யும் அஸ்வின் இந்த முறை சாதிப்பாரா என்று சந்தேகம் வந்துள்ளது. ஒரு பக்கம் அஸ்வின் இப்படி திணற இன்னொரு பக்கம், முரளி விஜய் மிக மோசமாக திணறி வருகிறார் .
சென்னை தோல்வி
சென்னை அணி ஒவ்வொரு முறை தோல்வி அடைவதற்கும் இவர் காரணமாக பார்க்கப்படுகிறார். சென்னை அணியின் ஓப்பனிங் வீரராக களமிறங்கி, இவர் பந்துகளை குடித்துவிட்டு பெரிய அளவில் ரன் எடுக்காமல் ஏமாற்றம் அளித்து வருகிறார். தமிழகத்தை சேர்ந்த இவர் மீது சென்னை ரசிகர்களே கோபத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் எப்போதும் போல விஜய் சங்கர் இந்த முறையும் சொதப்ப தொடங்கி உள்ளார்.
சொதப்பி வருகிறார்
வங்கதேசத்திற்கு எதிராக இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இருந்து இப்போது வரை விஜய் சங்கர் தொடர்ந்து சொதப்பிக் கொண்டு இருக்கிறார். உலகக் கோப்பை தொடரிலும் மிக மோசமாக இவர் ஆடி விமர்சனங்களை சந்தித்தார். இந்த முறை ஹைதராபாத் அணியிலும் இவர் சரியாக ஆடவில்லை. இதனால் இன்றைய போட்டியில் இவருக்கு வாய்ப்பே அளிக்கப்படவில்லை.
வேறு சில வீரர்கள்
இன்னொரு பக்கம் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்க்டன் சுந்தர் பெரிய அளவில் பவுலிங் செய்யவில்லை. கொஞ்சம் சுமாராக பேட்டிங் செய்கிறார். பஞ்சாப் அணியில் விளையாடும் முருகன் அஸ்வின் மட்டும் தமிழக வீரர்களில் கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறார்.கும்ப்ளேவின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி பெறும் இவரின் ஸ்பின் பெரிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது.
ஏன் தமிழக வீரர்கள்
இப்படி ஐபிஎல் தொடரில் விளையாடும் தமிழக வீரர்கள் எல்லோரும் சொதப்புவது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது. தமிழக வீரர்கள் எப்போது இதில் பார்மிற்கு வருவார்கள். தமிழக ரஞ்சி அணியில் இருக்கும் வீரர்கள் எப்போது வெளிச்சத்திற்கு வருவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.