4000 கோடி நஷ்டம்
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் நடக்க உள்ளது, இந்த ஆண்டு தொடரை ரத்து செய்தால் சுமார் 4000 கோடி வரை பிசிசிஐக்கு மட்டும் நஷ்டம் ஏற்படும் என்பதால் எப்படியாவது தொடரை நடத்தியே தீருவது என பிசிசிஐ களத்தில் குதித்துள்ளது.
நஷ்டத்தை தவிர்க்க முடியும்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் முழு ஐபிஎல் தொடரையும் நடத்த உள்ளது பிசிசிஐ. இந்த திட்டத்தால் பிசிசிஐக்கு இழப்பு ஏற்படும். ஆனாலும், பெரிய நஷ்டத்தை தவிர்க்க முடியும் என்பதால் வீரர்கள் உடல்நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளிநாட்டுக்கு செல்ல உள்ளது.
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை
இந்தியா - சீனா எல்லை பிரச்சனையால் ஐபிஎல் தொடருக்கும் ஒரு சிக்கல் எழுந்தது. ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சரான விவோ மொபைல் நிறுவனம் சீனாவை சேர்ந்தது என்பதால் அந்த நிறுவனத்துடனான விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு குரல்கள் எழுந்தன.
விவோ ஒப்பந்தம்
இதை அடுத்து விவோ மொபைல் நிறுவனம் தாமாகவே இந்த ஒரு ஆண்டுக்கு மட்டும் விளம்பர ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அடுத்த ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரை தேடி வந்தது பிசிசிஐ.
பிசிசிஐ அழைப்பு
ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுத்து இருந்தது பிசிசிஐ. கடைசி தேதி வரைமுடிந்த நிலையில் ஐந்து நிறுவனங்கள் நிச்சயமாக விண்ணப்பித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஐந்து நிறுவனங்கள்
டாடா குழுமம், ரிலையன்ஸ் ஜியோ, பதஞ்சலி, பைஜுஸ் மற்றும் உன்அகாடமி ஆகியவையே அந்த ஐந்து நிறுவனங்கள். ட்ரீம் 11 எனும் ஆன்லைன் பெட்டிங் நிறுவனமும் விண்ணப்பித்து இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது உறுதிப்படுத்தப்படவில்லை. மற்ற ஐந்தில், உன்அகாடமி மற்றும் பதஞ்சலி இந்தியாவில் மட்டுமே இயங்கும் நிறுவனங்கள். சீன நிறுவனங்களுக்கு எதிரான மனநிலை இருக்கும் நிலையில், இந்திய நிறுவனத்தை பிசிசிஐ தேர்வு செய்யவும் வாய்ப்பு உள்ளது.
விளம்பர ஒப்பந்தங்கள்
இது தவிர ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பல்வேறு வகைகளில் விளம்பர ஒப்பந்தங்கள் செய்துள்ள நிறுவனங்கள் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் ஆவது அவர்களுக்கு பயன் தருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜியோ நிறுவனம் பல அணிகளின் ஸ்பான்சராக உள்ளது. தொலைக்காட்சியிலும் பெரிய அளவில் விளம்பரம் செய்யும்.
பைஜுஸ் நிலை
பைஜுஸ் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரிலும் முக்கிய ஸ்பான்சர் ஆவது அந்த நிறுவனத்துக்கு கூடுதல் சுமையாகவே இருக்கும் என்கிறார்கள் சந்தை பார்வையாளர்கள். இவர்கள் யாரையும் விட கூடுதல் ஆர்வம் காட்டுவது டாடா குழுமம் தான் என கூறப்படுகிறது.
300 கோடி
விவோ நிறுவனம் ஓராண்டுக்கு 440 கோடி கொடுத்த நிலையில், இந்த ஆண்டுக்கு மட்டும் ஸ்பான்சர் ஆகும் நிறுவனம் 300 கோடி கொடுத்தால் கூட பிசிசிஐ ஏற்றுக் கொள்ளும் என கூறப்படுகிறது. மேலும், தீபாவளி சீசனில் ஐபிஎல் நடக்க உள்ளது. இது குறைந்த செலவில் கிடைக்கும் மிகவும் அரிய வாய்ப்பு.
டாடா தீவிரம்
டாடா குழுமத்தின் ஒரு பிராண்ட் மட்டுமே ஐபிஎல் தொடரில் ஸ்பான்சராக உள்ளது. எனவே அந்த நிறுவனம் 300 கோடி மட்டுமே அளித்து ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் ஆனால் அது பெரிய அளவில் அந்த நிறுவனத்துக்கு பயன் தரும் என்றும், டாடா குழுமம் இந்த வாய்ப்பை பயன்படுத்த தீவிரமாக இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.