என்ன மோதல்
இந்த போட்டி பஞ்சாப் vs பெங்களூர் என்று பார்க்கப்பட்டதை விட கோலி vs கும்ப்ளே என்றுதான் பார்க்கப்பட்டது. கோலிக்கும் கும்ப்ளேவிற்கும் இருந்த பழைய மோதல் காரணமாக நேற்றைய போட்டி அதிக கவனம் ஈர்த்தது. இந்திய கேப்டன் கோலிக்கும் கும்ப்ளேவிற்கும் கடந்த 3 வருடமாக மோதல் நிலவி வருகிறது. கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போதே இந்த மோதல் ஏற்பட்டது.
மோதல் காரணம்
பயிற்சியில் ஏற்பட்ட சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் மோதலாக உருவெடுத்தது. இது பின் சண்டையாக மாறி கும்ப்ளே அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. எனக்கும் கேப்டனுக்கும் சரியான உறவு இல்லை. அதனால் பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேறுகிறேன் என்று கும்ப்ளே அப்போதே வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார்.
மெயில்
அதோடு கும்ப்ளேவின் ராஜினாமாவிற்கு கோலிதான் அழுத்தம் கொடுத்தார். கோலிதான் இது தொடர்பாக பிசிசிஐ அமைப்பின் அப்போதைய சிஇஓ ராகுல் ஜோரிக்கு தொடர்ந்து பலமுறை மெயில் அனுப்பினார் என்று தகவல்கள் வந்தது. இந்த மெயில்கள் கூட இணையத்தில் கசிந்தது.அப்போதில் இருந்தே கோலி மற்றும் கும்ப்ளே இடையே கடுமையான மோதல் இருந்தது.
முக்கியமான போட்டி
இதனால்தான் நேற்று நடந்த போட்டி அதிகம் கவனிக்கப்பட்டது. அதேபோல் நேற்று நடந்த போட்டியில் கோலியின் பெங்களூர் படையை கும்ப்ளேயின் பஞ்சாப் படை வீழ்த்தி உள்ளது. முக்கியமாக கும்ப்ளே தனது ஸ்பின் அஸ்திரத்தை வைத்தே பெங்களூர் அணியை வீழ்த்தி உள்ளார். முருகன் அஸ்வின் மற்றும் ரவி பிஷ்னோய் என்ற இரண்டு இளம் ஸ்பின்னர்களை வைத்தே பெங்களூரை காலி செய்துள்ளார்.
திட்டம் போட்டார்
கோலி இப்படித்தான் திட்டம் போடுவார், இப்படித்தான் பீல்டிங் நிற்க வைப்பார் என்று அனைத்தையும் கணித்து, அதிரடியாக காய் நகர்த்தி கும்ப்ளே வெற்றிபெற்று உள்ளார். அதிலும் கோலியை 1 ரன்னுக்கும், ஆரோன் பின்ச், ஏபிடியை சொற்ப ரன்களுக்கும் அவுட் செய்து, கும்ப்ளே பழிக்கு பழி வாங்கிக் கொண்டார். கோலி 2017ல் அனுப்பிய மெயில்கள் அனைத்திற்கும் நேற்று மொத்தமாக கும்ப்ளே பதிலடி கொடுத்துள்ளார்.
முருகன் அஸ்வின்
அதிலும் நேற்று 17வது ஓவரின் இரண்டாவது பந்தில் முருகன் அஸ்வின் ஓவரில் நவ்தீப் சைனி விக்கெட் விழுந்தது. முருகனின் கூக்லியில் சைனி போல்ட் ஆனார். இதை கும்ப்ளே முன்பே சரியாக கணித்து இருந்தார். இதை பார்த்ததும் கிண்டலாக சிரித்துக் கொண்டார்..என்ன எல்லோரும் ''போல்ட்'' ஆகுறாங்க ஓ இதுதான் ''பிளேயிங் போல்டா?'' என்பது போல கிண்டலாக சிரித்தார்.. இதனால் போட்டி முடிந்தும் கோலியின் முகம் உர்ரென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.