கோலாகல துவக்கம்
இந்திய கிரிக்கெட்டின் பெருமைக்குரிய விஷயமாக கருதப்படும் ஐபிஎல் தொடரின் இந்த சீசனுக்கான போட்டிகள் வரும் மார்ச் 29ம் தேதி துவங்கவுள்ளதாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி மோதல்
ஐபிஎல் 2020ன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 29ம் தேதி துவங்கவுள்ளதாகவும் முதல் போட்டியை நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி துவக்கி வைக்க உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
களமிறங்கும் வெளிநாட்டு வீரர்கள்
கடந்த 19ம் தேதி கொல்கத்தாவில் ஐபிஎல் ஏலம் நடைபெற்ற நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
மற்ற தொடர்கள் காரணம்
இந்நிலையில் ஆஸ்திரேலியா -நியூசிலாந்து இடையில் நடைபெறவுள்ள சர்வதேச டி20 போட்டிகள் மார்ச் 29ம் தேதியும் இங்கிலாந்து -இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டிகள் மார்ச் 31 வரையிலும் நடைபெறவுள்ளதால் ஐபிஎல்லின் ஆரம்ப போட்டிகளில் இந்த அணிகளின் வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தேதியை மாற்ற கோரிக்கை
அதிக பணத்தில் வெளிநாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இல்லாமல் ஐபிஎல்லை துவக்குவது சரியாக இருக்காது என்றும் இதனால் ரசிகர்களும் ஏமாற்றமடைவார்கள் என்றும் இதையடுத்து ஐபிஎல் துவக்கத் தேதியை ஏப்ரல் 1க்கு மாற்ற கோரிக்கை விடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் நிர்வாகத்திடம் கோரிக்கை
ஐபிஎல் போட்டிகளில் துவக்கம் முதலே வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்று ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தர வேண்டுமானால் தேதி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று அணியினர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.