2௦20 ஐபிஎல் தயார்நிலை
2020 ஐபிஎல் தொடருக்கான ஏலம் விரைவில் நடக்க உள்ளதால் அனைத்து அணிகளும் ஏற்கனவே, இருக்கும் அணியில் சிறிய மாற்றங்கள் செய்வது, பயிற்சியாளர்கள் மாற்றம் என கடந்த சில வாரங்களாக பரபரப்பாக இருந்தன.
மாற்றம் செய்ய கடைசி நாள்
நவம்பர் 14 தான் கடைசி நாள். அதற்குள் அணிகள் தங்களுக்குள் வீரர்களை அணி மாற்றம் செய்து கொள்ளலாம். அதே போல, அணியை விட்டு விடுவிக்கவும் செய்யலாம். இதை ஒட்டி சில அணிகள் கடந்த சில நாட்களாக வீரர்களை மாற்றம் செய்வதில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன.
விரைவில் ஏலம்
2020 ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 19 அன்று நடைபெற உள்ளது. நவம்பர் 14 முதல் ஏலம் வரை ஐபிஎல் அணிகள் அணியில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
டெல்லி அணி மாற்றம்
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளரும், உலகின் மின்னல் வேக பந்துவீச்சாளர்களில் ஒருவருமான ட்ரென்ட் பவுல்ட்டை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அணி மாற்றம் செய்துள்ளது.
பயன் இல்லை
டெல்லி அணியின் சொந்த மைதானமான பெரோஸ் ஷா கோட்லா சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் அங்கே வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக வேலை இல்லை. கடந்த ஐபிஎல் தொடரில் ட்ரென்ட் பவுல்ட்-ஐ டெல்லி அணியால் அனைத்து போட்டிகளிலும் பயன்படுத்த முடியாத சூழலே நிலவியது.
பஞ்சாப் மாற்றம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சர்வதேச அனுபவம் இல்லாத அங்கித் ராஜ்புத் என்ற உள்ளூர் வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அணி மாற்றம் செய்துள்ளது. அவர் 2018 ஐபிஎல் தொடரில் 14 ரன்களுக்கு 5 விக்கெட்கள் வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய ஒரே சர்வதேச அனுபவம் அற்ற வீரர் இவர் மட்டுமே.
அஸ்வின் மாற்றம்
சில நாட்கள் முன்னதாக அஸ்வின் பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு இணையாக 1.5 கோடி மற்றும் ஒரு உள்ளூர் வீரரை வழங்கியது டெல்லி அணி. அது தான் இந்த ஆண்டின் மிகப் பெரிய ஐபிஎல் வீரர் மாற்றம்.