கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கிய நேரத்தில் பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்துவதில் உறுதியாக இருந்தது. எனினும், இந்தியாவில் அதன் பாதிப்பு அதிகரித்து, தொடர்ந்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், ஐபிஎல் தொடரை கால வரையின்றி தள்ளி வைத்தது பிசிசிஐ.
சிக்கலில் பிசிசிஐ
ஐபிஎல் தொடரை நடத்தாமல் போனால் பிசிசிஐக்கு சுமார் 4,000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. அந்த நஷ்டத்தால் சம்பளக் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். பிசிசிஐ இக்கட்டான நிலையில் தவித்து வந்தது.
கடும் நஷ்டம்
மறுபுறம், மார்ச் 13க்குப் பின் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை. அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் பல்வேறு வழிகளில் நஷ்டம் அடைந்தன. எப்படியாவது கிரிக்கெட் போட்டிகளை துவக்க வேண்டும் என அனைத்து அணிகளும் முயற்சி செய்து வந்தன.
இலங்கை அழைப்பு
இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இந்தியாவுடன் கிரிக்கெட் ஆட ஆர்வம் காட்டின. இதில் கடும் நஷ்டத்தில் இருக்கும் இலங்கை கிரிக்கெட் போர்டு, தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தக் கோரி பிசிசிஐக்கு அழைப்பு விடுத்தது.
2020 டி20 உலகக்கோப்பை
அக்டோபர் மாதம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்த 2020 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறாது என கூறப்படுகிறது. உலகக்கோப்பை தொடர் நடைபெறாத பட்சத்தில், அதே இடைவெளியில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ காய் நகர்த்தி வருகிறது.
எங்களால் முடியும்
இந்த நிலையில். ஐக்கிய அரபு அமீரகம் தங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே, அந்த நாட்டில் சில ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளது. அதை சுட்டிக் காட்டி தங்களால் ஐபிஎல் தொடரை சிறப்பாக நடத்தித் தர முடியும் என கூறி உள்ளது.
இங்கிலாந்து அணிக்கும் அழைப்பு
மேலும், இங்கிலாந்து அணியையும் தங்கள் நாட்டில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஆட அழைப்பு விடுத்துள்ளது ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு. இங்கிலாந்து அணி தங்கள் நாட்டிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் கிரிக்கெட் தொடரில் ஆட தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
பதில் இல்லை
இந்த அழைப்புக்கு பிசிசிஐ எந்த பதிலும் கூறவில்லை. காரணம், கொரோனா வைரஸுக்கு மத்தியில் கிரிக்கெட் தொடரை எந்த நாட்டில் நடத்தினாலும், அங்கே செல்ல இந்திய அரசு அனுமதி பெற வேண்டும். மேலும், வீரர்கள் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அமைதி காத்து வருகிறது பிசிசிஐ.
இந்தியாவில் தான்..
ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டால் இந்தியாவில் மட்டுமே நடத்தப்படும் என பிசிசிஐ வட்டாரம் கூறி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாட்டு கிரிக்கெட் அமைப்புகளுக்கும் பிசிசிஐ எந்த பதிலும் கூறவில்லை. ஐபிஎல் தொடர் நடக்குமா? என்பதும் உறுதியாகவில்லை.