சாதனை
நேற்று டெல்லிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா எளிதாக வெற்றிபெற வருண் சக்ரவர்த்தியின் இந்த ஐந்து விக்கெட் முக்கிய காரணமாக இருந்தது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற வருண் நேற்று பேட்டி அளித்தார். அதில். இப்போது நடக்கும் விஷயங்களை என்னால் நம்ப கூட முடியவில்லை. கடந்த சில போட்டிகளாக என்னால் விக்கெட் எடுக்க முடியவில்லை.
எத்தனை விக்கெட்
இன்று எப்படியாவது ஒன்று அல்லது இரண்டு விக்கெட் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் ஐந்து விக்கெட் எடுத்து இருக்கிறேன். முக்கியமாக ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை எடுத்தது எனக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி கொடுத்தது. ஷார்டர் எண்ட் பகுதியில் இருந்து பவுலிங் செய்தேன்.
ஸ்டம்ப் குறி வைத்தேன்
இதனால் ஸ்டம்ப்பை குறி வைக்க திட்டமிட்டேன். திட்டம் சரியாக வேலை செய்தது.என்னுடைய தாய் ஹேமா மாலினிக்கும், தந்தை வினோத் சக்கரவர்த்திக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதேபோல் நான் திருமணம் செய்து கொள்ள போகும் நேஹாவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பயிற்சியாளர்கள்
அணியில் இருக்கும் பயிற்சியாளர்கள், அண்ணன் டிகே, அபிஷேக் நாயர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். 2018ல்தான் நான் முழுமையான ஸ்பின் பவுலராக மாறினேன். அதன்பின் எனக்கு டிஎன்பிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதில் சில ஏற்ற இறக்கம் இருந்தது. கடந்த வருடம் காயம் காரணமாக அவதிப்பட்டேன்.
வாய்ப்பு
இதனால் எனக்கு அணியில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வருடம் கம்பேக் கொடுத்தது சந்தோசம் தருகிறது. மிக கடினமாக உழைத்து வருகிறேன். பல பேர் எனக்கு ஊக்கம் அளித்தனர். பல பேர் எனக்கு நம்பிக்கை கொடுத்தனர். 2015ல் என்னிடம் பணமே இல்லை. அப்போது எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லை. நான் அப்போது ஆர்கிடெக்ட் ஆக இருந்தேன்.
பணம் இல்லை.
ஃபிரிலான்ஸ் பணிகளை செய்து கொண்டு இருந்தேன். என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்யவே என்னிடம் பணம் இல்லை. நான் ஏதாவது வித்தியாசமாக செய்யலாம் என்று நினைத்தேன். அதன்பின் கிரிக்கெட் பக்கம் திரும்பினேன். எனக்கு இப்போதும் ஆர்கிடெக்ட் பிடிக்கும், அவ்வப்போது இப்போதும் அந்த பணிகளை செய்து வருகிறேன், என்று வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.