சிறந்த பயிற்சியாளர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிகபட்ச வெற்றிகரமான பயிற்சியாளர் என்றால் அது ரே ஜென்னிங்க்ஸ் தான். ஐந்து சீசன்களில் அவர் அந்த அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். அவர் இருந்த போது தான் பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
பயிற்சியாளர் ரே ஜென்னிங்க்ஸ்
2008 ஐபிஎல் தொடரில் ஏழாம் இடம் பெற்றது பெங்களூர் அணி. அப்போது தான் தென்னாப்பிரிக்க அணி பயிற்சியாளராக இருந்த ரே ஜென்னிங்க்ஸ் பெங்களூர் அணிக்கு பயிற்சியாளராக வந்தார். அவர் வந்த முதல் சீசனில், 2009இல் பெங்களூர் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
கோலி கேப்டன் ஆனார்
2011இல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. எனினும், 2010 மற்றும் 2012, 2013 சீசன்களில் அந்த அணியால் பிளே-ஆஃப் செல்ல முடியவில்லை. அத்துடன் அவர் விலகினார். அவர் பெங்களூர் அணியில் இருந்த போது தான் விராட் கோலி அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ரே ஜென்னிங்க்ஸ் என்ன சொன்னார்?
ஒரு வீரராகவும், கேப்டனாகவும் ஐந்து ஆண்டுகள் விராட் கோலியுடன் பழகி உள்ள ரே ஜென்னிங்க்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி தவறான வீரர்களை ஆதரித்ததாக கூறி உள்ளார். தன்னுடன் சில விஷயங்களில் மோதியதாகவும் கூறினார்.
தவறான வீரர்கள்
ரே ஜென்னிங்க்ஸ் கூறுகையில், ஐபிஎல் அணியில் 25 முதல் 30 வீரர்கள் இருப்பார்கள். ஒரு பயிற்சியாளருக்கு அனைவரையும் கவனிக்க வேண்டிய கடமை உள்ளது. சில சமயம் அணியில் கோலி தனியாக இருப்பார். சில சமயம் அவர் தவறான வீரர்களை ஆதரித்தார் என்றார்.
கருத்து வேறுபாடு
அதற்காக அவரை தவறு சொல்ல முடியாது. நான் சில வீரர்களை குறிப்பிட்ட சூழ்நிலையில் பேட்டிங் அல்லது பந்து வீச வேண்டும் என விரும்பினேன். ஆனால், அவருக்கு வேறு சில யோசனைகள் இருந்தன என தன்னுடன் கோலி கருத்து வேறுபாட்டுடன் இருந்ததை குறிப்பிட்டார்.
அணியில் சிலர் இருக்க வேண்டும்
அடுத்து, கோலி தற்போது வளர்ந்து வருவதாக கூறிய அவர், ஐபிஎல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மாறுபட்டது. ஆறு வாரத்தில் ஒரு வீரர் பார்முக்கு வரலாம். வராமலும் போகலாம். எனவே, சிலர் அந்த அணியில் எப்போதும் இருக்க வேண்டும் என்றார்.
முதிர்ச்சி அடைந்து வருகிறார்
நான் சில வீரர்கள் அணியில் நீடிக்க வேண்டும் என விரும்புவேன். ஆனால், கோலி வேறு யோசனையுடன் இருப்பார். எனினும், அவர் தற்போது நாளுக்கு நாள் முதிர்ச்சி அடைந்து வருகிறார். விரைவில் ஐபிஎல் கோப்பைகளை அவர் வெல்வார் என்றார் ஜென்னிங்க்ஸ்.
சில பிரச்சனைகள் வந்தன
விராட் கோலி நம்ப முடியாத கிரிக்கெட் மூளை கொண்டவர். தனக்கென அதிகபட்ச தர நிர்ணயத்தை வைத்துள்ளார். அவருக்கும் எனக்கும் ஒரு சில பிரச்சனைகள் வந்தன. அந்த சமயத்தில் எப்போதும் விராட் உடன் ஒருவர் அவரை வழிநடத்த இருக்க வேண்டும் என்றார்.
வெளிப்படையான பேச்சு
விராட் கோலி குறித்து எந்த பயிற்சியாளரும் இத்தனை வெளிப்படையாக பேசியதில்லை. ரே ஜென்னிங்க்ஸ் கூறியுள்ள தகவல்கள் அவரது கேப்டன்சி துவக்கத்தில் எப்படி இருந்தது என்பதை பற்றி கூறுவதாக உள்ளது. எனினும், கோலி தற்போது முதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறி இருக்கிறார்.