கோப்பையை வெல்ல தீவிரம்
விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியினர் இதுவரை 3 முறை இறுதிப்போட்டி வரை வந்தும் ஐபிஎல்லில் கோப்பையை கைகொள்ளவில்லை. கொரோனா காரணமாக இந்தமுறை ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபாயில் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து 53 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த முறை கோப்பையை கைப்பற்ற ஆர்சிபி அணி வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விராட்டின் பயிற்சி புகைப்படங்கள்
விராட் கோலி தலைமையில் அந்த அணி வீரர்கள் இரவு பகல் பாராமல் தொடர்ந்து பயிற்சிப் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அணி வீரர்களின் பயிற்சிகளை அவ்வப்போது அந்த அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தான் பயிற்சி செய்த புகைப்படங்களை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விராட் கோலி அதிரடி
இந்தப் புகைப்படங்களில் போகஸ் என்ற கேப்ஷனையும் சில எமோஜிகளையும் அவர் இணைத்துள்ளார். ஒரு புகைப்படத்தில் பீல்டிங் செய்வது போலவும் மற்றொன்றில் கவர் டிரைவை அடித்தபின்பு பேட்டை பிடித்தபடியும் உள்ளார் விராட் கோலி. இதன்மூலம் அவர் தீவிர பயிற்சியில் உள்ளதையும் இந்த முறை கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டுவதையும் உணர முடியும்.
டீ வில்லியர்ஸ் பாராட்டு
கடந்த 2016ல் இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை பறிகொடுத்தது ஆர்சிபி. இந்நிலையில் அப்போது இருந்த அமைதியான மனநிலை தற்போது உள்ளதாக விராட் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதே கருத்தை தெரிவித்த அணி வீரர் ஏபி டீ வில்லியர்ஸ், கோலி போன்ற கேப்டன் இருந்தால் அணி வீரர்கள் எதையும் சாதிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.